மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, கடந்த ஒன்பது ஆண்டுகளில் நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று கூறினார். மேலும், நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு தீவிர சிகிச்சைப் பிரிவை மத்திய அரசு உருவாக்கி வருவதாகவும் அவர் அறிவித்தார்.
ஆங்கிலத்தில் படிக்க: ‘Increased MBBS seats from 50,000 in 2014 to over 1 lakh,’ says Mansukh Mandaviya
“கடந்த ஒன்பது ஆண்டுகளில், நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 1,70,000 உடல்நலம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கிரிட்டிகல் கேர் பிரிவை நாங்கள் உருவாக்குகிறோம்,” என்று மன்சுக் மாண்டவியா ஷில்லாங்கில் உள்ள NEIGRIHMS இல் உரையாற்றினார்.
ஷில்லாங்கில் உள்ள வடகிழக்கு இந்திரா காந்தி பிராந்திய சுகாதார மற்றும் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (NEIGRIHMS) பிராந்திய புற்றுநோய் மையத்தை சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா திறந்து வைத்தார். அப்போது, 2014ல் 50,000 ஆக இருந்த எம்.பி.பி.எஸ் இடங்கள் தற்போது 1,07,000 ஆக உயர்ந்துள்ளதாக அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறினார்.
NEIGRIHMS இல் 150 படுக்கைகள் கொண்ட கிரிட்டிகல் கேர் பிளாக்கிற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, "NEIGRIHMS இல் உள்ள புதிய வசதிகள் வடகிழக்கு மக்களுக்கு மிகவும் தேவையான சுகாதார சேவைகளை வழங்கும். இப்பகுதியில் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது,'' என்று கூறினார்.
"NEIGRIHMS ஐ தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனமாக உருவாக்குவது எங்கள் திட்டம்" என்று மன்சுக் மாண்டவியா கூறினார்.
ஷில்லாங்கில் உள்ள NEIGRIHMS இல் UG மருத்துவக் கல்லூரி, பிராந்திய புற்றுநோய் மையம் மற்றும் மெய்நிகர் பிரேத பரிசோதனை வசதி, புதிய மாடுலர் OT வளாகத்தை அமைச்சர் திறந்து வைத்தார். "இந்த வசதிகள் மேகாலயா மக்களுக்கு மலிவு மற்றும் தரமான மருத்துவ சேவையைப் பெற உதவும்," என்று அமைச்சர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“