/indian-express-tamil/media/media_files/2025/09/05/indian-students-abroad-2025-09-05-20-22-44.jpg)
உலகெங்கும் கல்வி கற்கும் இந்திய மாணவர்களின் விருப்பத் தேர்வுகளில் ஒரு புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. பாரம்பரியமாக அதிகம் பேர் விரும்பும் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளைத் தாண்டி, இப்போது ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகள் பிரபலம் அடைந்து வருகின்றன. அப்க்ராட் 'upGrad' நிறுவனத்தின் Transnational Education (TNE) Report 2024–25 அறிக்கை இந்த சுவாரஸ்யமான மாற்றத்தை வெளிப்படுத்துகிறது.
ஜெர்மனியின் எழுச்சி!
நீண்ட காலமாக இந்திய மாணவர்களின் கனவு இடமாக இருந்த அமெரிக்கா, இப்போது தனது கவர்ச்சியை இழந்து வருகிறது. அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பங்கள் கடந்த ஆண்டில் 13% சரிவை சந்தித்துள்ளன. அதே சமயம், ஜெர்மனி ஒரு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
2022-ல் வெறும் 13.2% ஆக இருந்த ஜெர்மனிக்கான விண்ணப்பங்கள், இப்போது 32.6% ஆக உயர்ந்து, அமெரிக்கா மற்றும் கனடாவை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தைப் பிடித்துள்ளன. இன்னொருபுறம், கனடாவுக்கான விண்ணப்பங்கள் 17.85%-லிருந்து 9.3% ஆகக் கடுமையாகச் சரிந்துள்ளன.
ஐரோப்பிய நாடுகளில், ஜெர்மனி மட்டுமின்றி, அயர்லாந்து (3.9%), பிரான்ஸ் (3.3%) போன்ற நாடுகளும் இந்திய மாணவர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. மேலும், ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றொரு முக்கிய இடமாக வளர்ந்து வருகிறது. அங்குள்ள சர்வதேச மாணவர்களில் 42% பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குடியேற்றம் அல்ல, வேலைவாய்ப்பே முக்கியம்!
இந்த மாற்றத்தின் முக்கிய காரணம், மாணவர்களின் குறிக்கோள்கள் மாறியுள்ளன. முன்பு, பல மாணவர்கள் வெளிநாட்டில் படித்து அங்கேயே நிரந்தரமாக குடியேற (PR) விரும்பினர். ஆனால், இப்போதைய தலைமுறையினர், நிரந்தர குடியுரிமையை (19.9%) விட, சிறந்த வேலைவாய்ப்புகளையே (45.7%) முக்கிய இலக்காகக் கொண்டுள்ளனர். இது வெறும் பயணமல்ல, தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான முதலீடு என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர்.
வெளிநாட்டுக் கல்விக்கான செலவு என்பது எப்போதும் ஒரு பெரிய சவால். இந்த அறிக்கையின்படி, 33% மாணவர்கள் கல்விக் கடன்களை நம்பியுள்ளனர், அதே சமயம் 28% பேர் கல்வி உதவித்தொகையை நாடுகின்றனர்.
படிப்பைப் பொறுத்தவரை, முதுகலை பட்டப்படிப்புகளே (Master's) அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன. 86.5% மாணவர்கள் முதுகலை படிப்பைத் தேர்வு செய்கின்றனர். மேலாண்மை மற்றும் MBA படிப்புகளின் புகழ் கடந்த மூன்று ஆண்டுகளில் 30%-லிருந்து 55.6% ஆக இரட்டிப்பாகியுள்ளது. STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) துறைகளிலும் ஆர்வம் அதிகரித்து, தற்போது 38.9% ஆக உள்ளது.
அப்ராட் (upGrad Study Abroad) நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரணீத் சிங் இந்த அறிக்கைத் குறித்து கூறுகையில், "இன்றைய இந்திய மாணவர்கள் தங்கள் கல்வித் தேர்வுகளில் மிகவும் தெளிவாக உள்ளனர். புவிசார் அரசியல் நிலைமைகள், செலவுகள், கறாரான விசா விதிமுறைகள் மற்றும் படிப்புக்குப் பிந்தைய வேலை வாய்ப்புகளில் உள்ள நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றால் அவர்கள் உந்தப்படுகிறார்கள். பாரம்பரியமான 'டாப் 4' இடங்கள் இனி இயல்புநிலைத் தேர்வாக இல்லை. அதற்குப் பதிலாக, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆசிய பசிபிக் நாடுகள் சிறந்த, எதிர்காலத்திற்குத் தயாரான மாற்று வழிகளாக உருவாகி வருகின்றன" என்று தெரிவித்தார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.