/indian-express-tamil/media/media_files/2025/08/19/madurai-high-court-2025-08-19-07-26-40.jpg)
250 மாணவர்கள் இருந்தால்தான் உடற்கல்வி ஆசிரியரா? - ஐகோர்ட் கிளை கேள்வி
ஒரு பள்ளியில் குறைந்தபட்சம் 250 மாணவர்கள் இருந்தால் மட்டுமே உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் அனுமதிக்கப்படும் என்ற பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாடு தேவையற்றது என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது. தென்காசி மாவட்டம், சிவகிரியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர், சிவகிரி எஸ்.ஆர்.பி. நடுநிலைப் பள்ளிக்கு உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி. ஆஷா, மேற்கண்ட கருத்தைத் தெரிவித்தார்.
நீதிபதி தனது உத்தரவில் மேலும் கூறியதாவது: 250 மாணவர்கள் என்ற வரம்பு, ஆச்சரியமாகவும், கவலை அளிப்பதாகவும் உள்ளது. தற்போதுள்ள காலகட்டத்தில், குழந்தைகள் சிப்ஸ் சாப்பிட்டுக்கொண்டு ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவதால் உடல் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டு, நீரிழிவு மற்றும் மனச்சோர்வு போன்ற நோய்கள் அதிகரித்து வருகின்றன.
சுறுசுறுப்பான மனதிற்கு சுறுசுறுப்பான உடல் அவசியம். அரசின் பாடத்திட்டத்தின்படி உடற்கல்விக்கு ஒரு நாளைக்கு 2 பாடவேளைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே, அரசின் இந்தக் கட்டுப்பாடு பொருத்தமற்றதாகத் தெரிகிறது. உடற்கல்வி இல்லாத ஒரு குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் கடுமையாகப் பாதிக்கப்படும். எனவே, அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகள் என அனைத்துப் பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் தொடர்பான அரசின் கொள்கை மற்றும் கட்டுப்பாட்டுக்கான காரணங்கள் குறித்துப் பள்ளிக் கல்வித் துறைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.