கர்நாடக அமைச்சரவை, பள்ளிகளுக்கான பாட திட்டத்தில் மாற்றம் செய்வதற்கு ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து, 6 முதல் 12ம் வகுப்புகளுக்கான கன்னட பாடம் மற்றும் சமூக அறிவியல் பாடத்தில் 18 மாற்றங்களை செய்ய கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் பாடத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாக கர்நாடக பாடநூல் அமைப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பை நிறுவிய கேசவ் பலிராம் ஹெட்கேவார் தொடர்பான “ Who Should Be an Ideal Man” என்ற பாடத்தை காங்கிரஸ் அரசு நீக்கி உள்ளது. அதற்கு பதிலாக ’சுகுமாறா சுவாமி கதைகள்’ பற்றிய பாடத்தை சேர்த்துள்ளனர். இந்த பாடப் பகுதியை சிவகோட்டாச்சாரியா எழுதி உள்ளார். இந்நிலையில் 10ம் வகுப்பு கன்னட பாடத்தில் இது சேர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனது மகளுக்கு இந்தியாவின் முதல் பிரதமர் நேரு எழுதிய கடிதங்கள் தொடர்பான பாடத்தை மீண்டும் காங்கிரஸ் அரசு பாடதிட்டத்தில் கொண்டு வந்துள்ளது. இந்த பாடப்பகுதியை சித்தனஹல்லி கிருஷ்ணா ஷர்மா மொழி பெயர்த்துள்ளார். இந்நிலையில் இது 8ம் வகுப்பு கன்னட பாடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முந்தய பாஜக அரசு இந்த பாட திட்டத்தை நீக்கி, இதற்கு பதிலாக பரம்பள்ளி நரசிம்மா ஐத்தள் எழுதிய ’பூகைலாஸ்’ என்ற பாடப் பகுதியை சேர்த்தது. இந்நிலையில் தற்போது இந்த பாடப் பகுதி நீக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேருவின் பாடப் பகுதி நீக்கப்பட்டதற்கு, ஆர்.எஸ்.எஸ் அமைப்பை நிறுவிய கேசவ் பலிராம் ஹெட்கேவார் பாடப் பகுதிதான் முக்கியம் என்றும், சமூகத்திற்கு தேவையான ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்பதை இப்பாடத்திட்டம் விளக்குவதாக பாஜக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
பத்தாம் வகுப்பு கன்னட பாடத்தில் உள்ள வலதுசாரி கருத்தியல் கொண்ட சக்ரவர்த்தி சல்லிபலே மற்றும் சத்தியவந்தனி கணேஷின் பாடப் பகுதிகள் நீக்கப்பட்டுள்ளது. ஆனால் சக்ரவர்த்தி சல்லிபலே எழுதிய ’பாரத நாட்டின் கதாநாயகர்கள்’ (Heroes of Mother India) என்ற பாடப் பகுதி நீக்கப்படவில்லை. சத்தியவந்தனி கணேஷின் பாடப் பகுதிக்கு பதிலாக எழுத்தாளர் சாரா அபூபக்கர் பாடப் பகுதி சேர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 8ம் வகுப்பு கன்னட பாடத்தில் வீர சாவர்க்கரை மையப்படுத்திய பாடல் பகுதி நீக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக விஜயமாலா ரங்கநாத் எழுதிய ’Blood Group ‘ என்ற பகுதி இணைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 6ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் ’வேதிக் கலாச்சாரம்’ , ’ புதிய மதங்களின் தோற்றம், மனித உரிமைகள், பெண் சுதந்திர வீரர்கள், பெண் சமூக சீர்திருத்தவாதிகள் தொடர்பான பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வருகின்ற கல்வியாண்டில், பாடப் புத்தகத்தில் இந்த மாற்றங்கள் சேர்க்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“