கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 2021 - 2022ம் கல்வி ஆண்டில் ஒன்றாம் வகுப்பில் சேர்வதற்கான இணையதளவு பதிவு இன்று தொடங்கி ஏப்ரல் 19ம் தேதி முடிவடைகிறது. இரண்டாம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளில் சேர ஏப்ரல் 8ம் தேதி முதல் நேரடியாக சென்று பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி நிலையமான கேந்திரிய வித்யாலயாவில், ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் அப்பள்ளியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (kvsangathan.nic.in.) இன்று முதல் வழங்கப்படுகிறது.
இதில் 2021-22-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான வழிமுறை, மாணவர்களுக்கான குறைந்தபட்ச வயது போன்ற வழிகாட்டுதல் நெறிமுறைகளும் வழங்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து 19 நாள்களுக்கு நடைபெறும் இந்த மாணவர் சேர்க்கை பதிவு, ஏப்ரல் 19-ம் தேதி இரவு 7 மணியுடன் நிறைவடைகிறது.
இணையவழி மாணவர் சேர்க்கை பதிவு முடிவடைந்த பிறகு, விண்ணப்பித்தோர் பட்டியலில், கல்வியாண்டிற்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் விவரமும், காத்திருப்போர் பட்டியலிலுள்ள மாணவர்களின் விவரமும் பள்ளியின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் வெளியிடப்படும்.
கட்டாயக் கல்வித்திட்டத்தின் கீழும், சேவை முன்னுரிமை அடிப்படையிலும், பின்னர் மற்ற இடஒதுக்கீட்டின்படியும் தகுதியான மாணவர்கள் பட்டியல் தயாரிக்கப்படும்.
இந்த தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் முதல் தற்காலிக பட்டியல் ஏப்ரல் 23-ம் தேதி வெளியிடப்படும். இதில் ல் மாணவர் சேர்க்கை முழுதும் நிரம்பவில்லையெனில் ஏப்ரல் 30-ம் தேதி இரண்டாவது பட்டியல் வெளியிடப்படும்.
இரண்டாவது பட்டியலும் முழுக்க நிரம்பாத நிலையில், மே 5-ம் தேதி மூன்றாம் கட்டமாக தற்காலிக பட்டியல் வெளியிடப்படும்.
இதன்பின்னர் மே 10-ம் தேதி முதல் 13ம் தேதி வரை நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும். இதிலும் கட்டாயக் கல்வி சட்டத்தின் படி, எஸ்.சி., அல்லது எஸ்.டி., மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு தகுதியின் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். இதற்கான முதல்கட்ட பட்டியல் மே 15ம் தேதி வெளியிடப்படும்.
இதனைத் தொடர்ந்து, 11ம் வகுப்பைத் தவிர 2-ம் வகுப்பு முதல் மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் ஏப்ரல் 8-ம் தேதி முதல் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதில் விண்ணப்பிக்க ஏப்ரல் 15-ம் தேதி கடைசி நாளாகும். ஏப்ரல் 19-ம் தேதி மாலை 4 மணிக்கு மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட பட்டியல் வெளியிடப்படும். ஏப்ரல் 20 முதல் 27-ம் தேதிக்குள் மாணவர்கள் பட்டியல் இறுதி செய்யப்படும்.
10-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை முடிவடைந்த 10 நாள்களுக்குள் 11-ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும். இது கேந்திர வித்யாலயாவில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
கேந்திரிய வித்யாலயாவில் பயின்ற மாணவர்களுக்கான 11-ம் வகுப்பு சேக்கை முடிந்த பிறகே, மற்ற பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து கேந்திர வித்யாலயாவில் 11-ம் வகுப்பு சேரும் மாணவர்களுக்கு, சேர்க்கை நடைபெறும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”