எம்.பி.பி.எஸ் இன்டர்ன்ஷிப் உதவித் தொகை தொடர்பான வழக்கில், அனைத்து மாநிலங்களிலும் உள்ள மருத்துவக் கல்லூரிகள் மூலம் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை விவரங்களை சமர்ப்பிக்குமாறு தேசிய மருத்துவ ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எம்பிபிஎஸ் இன்டர்ன்ஷிப் பயிற்சியில் இருக்கும் மருத்துவர்களுக்கு உதவித்தொகை வழங்குவது தொடர்பான முக்கிய விவகாரத்தில், அனைத்து மாநிலங்களிலும் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் உதவித்தொகை நிலை குறித்த விவரங்களை சமர்ப்பிக்குமாறு தேசிய மருத்துவ ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 1-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
அனைத்து மாநிலங்களிலும் உள்ள முழு மருத்துவக் கல்லூரிகளின் விவரங்களையும் தேசிய மருத்துவ ஆணையம் வழங்கவில்லை என்றும், எனவே, செப்டம்பர் 15, 2023-ல் வழங்கப்பட்ட முந்தைய வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட வழிகாட்டுதலில், தேசிய மருத்துவ ஆணையத்தை ஒரு அட்டவணைப்படுத்தப்பட்ட கேள்விகளுக்கான விளக்கத்தை தாக்கல் செய்ய கேட்டுக்கொண்டது. (i) நாட்டில் உள்ள 70% மருத்துவக் கல்லூரிகள் பயிற்சியாளர்களுக்கு உதவித்தொகை அல்லது ஊதியம் வழங்குவதில்லை என்பது உண்மையா என்பதை விளக்குமாறு நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. குறைந்தபட்ச தொகுப்பு உதவித்தொகையை விட குறைவான தொகை வழங்கப்படுகிறதா (ii) இன்டர்ன்ஷிப் உதவித்தொகையை செலுத்தும் விதிமுறைக்கு இணங்குவதை உறுதிசெய்ய தேசிய மருத்துவ ஆணையம் என்ன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்ற கேள்விகளை உச்ச நீதிமன்றம் கேட்டிருந்தது.
தேசிய மருத்துவ ஆணையம் முழு விவரங்களையும் வழங்கவில்லை என்ற உண்மையைக் கவனத்தில் கொண்டு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுதன்ஷு துலியா மற்றும் பிரசன்னா பி வரலே ஆகியோர் அடங்கிய அமர்வு நான்கு வாரங்களுக்குள், முழு விவரங்களையும் வழங்க உத்தரவிட்டது.
இந்த வழகில் முந்தைய விசாரணையின் போது, மருத்துவக் கல்லூரிகள் எம்.பி.பி.எஸ் இண்டர்ன்ஷிப் பணி செய்யும் மருத்துவர்களுக்கு போதிய உதவித்தொகையை வழங்குவதில்லை என்று உச்ச நீதிமன்ற அமர்வு கவலை தெரிவித்தது. இவ்வளவு பெரிய கட்டணம் வசூலித்தாலும், மருத்துவக் கல்லூரிகள் உதவித்தொகை வழங்கத் தயாராக இல்லை என்று நீதிபதி துலியா வேதனை தெரிவித்தார்.
“அவை என்ன மாதிரியான மருத்துவக் கல்லூரிகள்? ஒரு கோடி வசூலிக்கிறார்கள், முதுகலை பட்டதாரிகளுக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கிறார்கள் என்று தெரியவில்லை, உதவித்தொகைகூட கொடுக்க தயாராக இல்லை. நீங்கள் அவர்களுக்கு பணம் செலுத்துங்கள், அல்லது உங்களுக்கு இன்டர்ன்ஷிப் இல்லை.” என்று நீதிபதி துலியா முந்தைய விசாரணையின்போது குறிப்பிட்டிருந்தார்.
ஏப்ரல் 1-ம் தேதி நடந்த விசாரணையின் போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தன்வி துபே, வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளுக்கு (எஃப்.எம்.ஜி) கூட உதவித்தொகை வழங்கப்படவில்லை என்று தெரிவித்தார். இதற்கு, நீதிமன்றம் அதன் அதிருப்தியை வெளிப்படுத்தியது மற்றும் எஃப்.எம்.ஜி-களை தனித்தனியாக நடத்த முடியாது என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
இந்த வழக்கின் வாதங்களைக் கேட்ட உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை மே 6-ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று வழக்கை ஒத்திவைத்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“