பள்ளிக்கல்வித் துறை சார்பில் சென்னையில் திறக்கப்பட்டுள்ள இந்த உயர் தொழில்நுட்ப ஸ்டுடியோக்கள் மாணவர்களின் திறமையை வெளிப்படுத்த பயன்படுத்தப்பட உள்ளது. இங்கே தயாரிக்கப்படும் வீடியோக்கள் பள்ளிக்கல்வித் துறை மற்றும் யூடியூப் மூலம் நடத்தப்படும் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (எஸ்.சி.இ.ஆர்.டி) அலுவலகத்தில் மெய்நிகர் ஒளிப்பதிவு மற்றும் ஒலிப்பதிவு ஸ்டுடியோ உள்ளிட்ட 5 உயர் தொழில்நுட்ப ஸ்டுடியோக்களை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பினை நடைமுறைப்படுத்தும் பொருட்டு மெய்நிகர் ஒளிப்பதிவுக் கூடம் (Virtual Studio) உள்ளிட்ட 5 தொழில்நுட்பப் படப்பதிவுக் கூடங்களையும், ஒலிப்பதிவுக் கூடத்தையும் பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் உள்ள மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும்… pic.twitter.com/t23UFLy1tp
— Anbil Mahesh (@Anbil_Mahesh) February 5, 2024
இது குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பினை நடைமுறைப்படுத்தும் பொருட்டு மெய்நிகர் ஒளிப்பதிவுக் கூடம் (Virtual Studio) உள்ளிட்ட 5 தொழில்நுட்பப் படப்பதிவுக் கூடங்களையும், ஒலிப்பதிவுக் கூடத்தையும் பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் உள்ள மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் திறந்துவைத்தோம்.
1 கோடியே 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும், 5 லட்சத்து 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் பயன்பெறும் வகையில் இப்படப்பதிவுக் கூடங்களில் காணொலிகள் உருவாக்கப்படவுள்ளது.
தொடர்ந்து பல்வேறு வகைகளில் மாணவர்களுக்கு வழிகாட்டி ஆலோசனைகள் வழங்கும் “14417” கட்டணமில்லா தொலை பேசியின் விரிவுப்படுத்தப்பட்ட சேவையினையும் தொடங்கி வைத்தோம்.” என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து பள்ளிக்கல்வித் துறை குறிப்பிடுகையில், “இந்த ஸ்டுடியோக்கள் முக்கியமான தலைப்புகளைக் காட்சிப்படுத்தவும், போட்டித் தேர்வு தயாரிப்புகள், தொழில் வழிகாட்டுதல், குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு, கலை மற்றும் கலாச்சாரம், ஆசிரியர்-மாணவர் பரிமாற்றம், வினாடி-வினா போட்டிகள் மற்றும் பேச்சு ஆங்கிலம் போன்றவற்றில் மாணவர்களுக்கு உதவ உள்ளடக்கத்தைத் தயாரிக்கவும் பயன்படுத்தப்படும்” என்று குறிப்பிட்டுள்ளது. “மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தவும் இந்த ஸ்டுடியோ பயன்படுத்தப்படும். இந்த வீடியோக்கள் துறை மற்றும் யூடியூப் மூலம் நடத்தப்படும் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வீடியோக்களை தயாரிக்க நிபுணர்களுடன் கலந்தாலோசிக்கப்படும். இந்த வீடியோக்கள் முலம் மாநிலம் முழுவதும் 58,721 பள்ளிகளில் 1.23 கோடி மாணவர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலம் முழுவதும் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஹைடெக் லேப்கள் இருக்கும் நிலையில், நடுநிலைப் பள்ளிகளிலும் ஹைடெக் லேப் அமைக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை சமீபத்தில் தெரிவித்தது. மேலும், அடுத்த கல்வியாண்டில் அனைத்து தொடக்கப்பள்ளிகளிலும் ஸ்மார்ட் கிளாஸ் உருவாக்கப்படும். இந்த இரண்டு திட்டங்களுக்காக மொத்தம் ரூ. 700 கோடி செலவழிக்கப்பட்டு பள்ளிகளுக்கு டிஜிட்டல் தோற்றம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.