மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 2,242 கிராம செவிலியர்கள் மற்றும் ஆய்வாளர்கள் உட்பட 5000 பேர் நியமனம் செய்யப்பட உள்ளதாக மருத்துவத்துறை மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை பாரிமுனையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சிறப்பு பல் மருத்துவப் பிரிவு, கலையரங்கம், பாதுகாவலர் அறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போன்ற பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழ்நாட்டில் உள்ள 3 பல் மருத்துவக் கல்லூரிகளால் ஏழை எளிய மக்கள் மிகவும் பயன் அடைந்து வருகின்றனர். ரூ.64 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் 620 மாணவர்கள் தங்கும் வகையில் விடுதி கட்டிடம் கட்டும் பணி இந்த மாத இறுதியில் தொடங்கி வைக்கப்பட உள்ளது. மேலும், ரூ.135 கோடி மதிப்பீட்டில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 750 முதுநிலை மருத்துவ மாணவர்கள் தங்கும் வகையில் விடுதி கட்டிடம் கட்ட உள்ளோம். மொத்தம் ரூ.200 கோடி செலவில் 1,400 மாணவர்கள் தங்கும் வகையில் 2 விடுதி கட்டிடம் இந்த மாத இறுதியில் முதல்வர் முதல்வர் அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கி வைக்கப்பட உள்ளது. விடுதிகள் கட்டும் பணி ஒன்றரை ஆண்டுகளில் முடிக்கப்பட்டு திறந்து வைக்க உள்ளோம்.
புதிதாக உருவான ஜே.என்.1 என்ற உருமாறிய கொரோனா தொற்று தற்போது பரவி வருகிறது. உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து சிங்கப்பூர் அரசு தொடர்பில் இருந்து, கேட்டறிந்து வருகிறோம். கேரளாவில் தற்போது 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. ஜனவரி 1-ம் தேதி சென்னையில் 10 பேர் உட்பட தமிழகத்தில் 15 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதேநேரம் குழு பாதிப்பு எங்கும் இல்லை.
ஜே.என்.1 என்ற உருமாறிய கொரோனாவால் காய்ச்சல், இருமல், சளி போன்ற மிதமான பாதிப்புகளே ஏற்படுகிறது. அதுவும் 4 நாட்களிலேயே சரியாகி விடுகிறது. எனவே பொதுமக்கள் அச்சம்கொள்ள தேவையில்லை. இணை நோய் உள்ளவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முககவசம் அணிந்து செல்ல வேண்டும். மற்றவர்களுக்கு தனி வார்டு அமைக்கப்படுமா என சமூக வலைதளங்களில் சிலர் கேட்கிறார்கள். தேவையற்ற பீதியை கிளப்புகிறார்கள். தனி வார்டு அமைத்து சிகிச்சை அளிக்கும் வகையில் பெரிய பாதிப்பு ஏதும் இப்போது ஏற்படவில்லை. யாரும் பதற்றம் அடைய வேண்டாம்.
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இதுவரை 1 கோடியே 67 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர் தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர்களும் பயனடையும் வகையில் இந்த திட்டத்தை விரிவுபடுத்தப் போகிறோம். மிகவிரைவில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படும்.
தமிழகத்தில் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 2,242 கிராம சுகாதார செவிலியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 1,021 மருத்துவர்கள் தேர்வு தொடர்பாக 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. அந்த வழக்குகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. தற்போது கொரோனா காலப் பணிக்கு மதிப்பெண் வழங்கும் பணி நடந்து வருகிறது. ஜனவரி 20-ம் தேதிக்கு முன்பு இப்பணி முடிக்கப்படும். பணியாளர்களுக்கு பணி ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார். 983 மருந்தாளுநர்களைத் தேர்வு செய்வதில் இருந்த 2 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளன. இவர்கள் விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். 1,200-க்கும் மேற்பட்ட சுகாதார ஆய்வாளர்களை தேர்வு செய்யும் பணியும் நடந்து வருகிறது" இவ்வாறு அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“