Advertisment

NEET UG 2024 Results: நீட் தேர்வு முடிவுகளை மறுபரிசீலனை செய்ய குழு அமைப்பு – மத்திய அரசு அறிவிப்பு

“தேர்வு நேரத்தை இழந்ததால்” கருணை மதிப்பெண்கள் பெற்ற 1,563 மாணவர்களைப் பற்றி எழுப்பப்பட்ட கோரிக்கைகளை மறுபரிசீலனை செய்ய நிபுணர்கள் குழு அமைப்பு; நீட் தேர்வு முடிவுகள் சர்ச்சையானதையடுத்து மத்திய அரசு நடவடிக்கை

author-image
WebDesk
New Update
central education ministry

நீட் தேர்வு முடிவுகளை மறுபரிசீலனை செய்ய நிபுணர்கள் குழு அமைப்பு (எக்ஸ்பிரஸ் புகைப்படம் - தீக்ஷா தெரி)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

NEET UG 2024 Results: நீட் தேர்வில் (NEET UG 2024) “நேர இழப்பை” சந்தித்த 1563 தேர்வர்களின் முடிவை மறுபரிசீலனை செய்ய நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சகம் மற்றும் தேசிய தேர்வு முகமை (NTA) இன்று அறிவித்தது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க:

இந்த குழுவிற்கு முன்னாள் யூ.பி.எஸ்.சி (UPSC) தலைவர் மற்றும் மூன்று கல்வியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். “தேர்வு நேரத்தை இழந்ததால்” கருணை மதிப்பெண்கள் பெற்ற 1,563 மாணவர்களைப் பற்றி எழுப்பப்பட்ட பரிசீலனைகளை இந்த நிபுணர்கள் குழு ஆராயும்.

இந்த குழு விசாரணையைத் தொடங்கியுள்ளது, மேலும் வரும் சனிக்கிழமைக்குள் தங்கள் தீர்ப்பை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இம்முறை, சத்தீஸ்கரில் இருவர் (பலோட் மற்றும் தண்டேவாடாவில் தலா ஒன்று), மேகாலயா, சூரத், ஹரியானாவின் பஹதுர்கர் மற்றும் சண்டிகரில் தலா ஒன்று என ஆறு மையங்களில் இருந்து 1563 மாணவர்களுக்கு நேர இழப்பு சிக்கல் ஏற்பட்டது.

இதற்கிடையில், மாணவர்கள் குழு பல உயர் நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஒரு நீட் தேர்வாளரால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டு, ஜூன் 7 அன்று டெல்லி உயர்நீதிமன்றத்தின் விடுமுறை பெஞ்ச் முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது, அதில் மனுதாரர் இயற்பியல் பாடத்தில் கேள்வி எண். 29ன் விடைக்குறிப்பு மற்றும் சில மையங்களில் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டு நேரம் ஆகியவற்றை சவால் செய்துள்ளார். இந்த வழக்கில் நோட்டீஸ் அனுப்பப்பட்டதை அடுத்து ஜூன் 12ஆம் தேதி அடுத்த விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

கல்கத்தாவில் உள்ள உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் முன் மற்றொரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது, அதில் மனுதாரர் நீட் தேர்வில் சில விண்ணப்பதாரர்களுக்கு 718 அல்லது 719 மதிப்பெண்கள் வழங்குவதை சவால் செய்துள்ளார். ஜூன் 6, 2024 அன்று இந்த வழக்கை விசாரித்த போது, தகுதிப் பட்டியலைத் தயாரிப்பதில் மாநில மற்றும் மத்திய அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கை எவ்வாறு பின்பற்றப்பட்டது என்பதை வெளிப்படுத்தும் வகையில், 10 நாட்களுக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு தேசிய தேர்வு முகமைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு 2 வாரங்களுக்குப் பிறகு, வழக்கமான பெஞ்ச் முன் அடுத்த விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

கூடுதலாக, ஒரு ரிட் மனுவை மற்றொரு நீட் தேர்வர் இந்திய உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார், அதில் உச்ச நீதிமன்றம், மே 17 அன்று இந்த விஷயத்தை விசாரித்து, பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த வழக்கு ஜூலை 8 ஆம் தேதி அடுத்த விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

தேசிய தேர்வு முகமை ஜூன் 4 அன்று நீட் தேர்வு முடிவை அறிவித்தது. குறிப்பிடத்தக்க சாதனையாக 67 மாணவர்கள் ரேங்க் 1 இல் இடம்பிடித்துள்ளனர். முதல் முறையாக, தேர்வு நேரத்தை இழந்ததற்காக பல தேர்வு மையங்களில் உள்ள பல மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை கருணை மதிப்பெண்கள் வழங்கியுள்ளது. மேலும் முழு மதிப்பெண் (720/720) பெற்ற 67 பேரில், 44 பேர் இயற்பியல் கேள்விக்கான விடை தவறாக இருந்ததால், அதற்கான கருணை மதிப்பெண்களை பெற்றதால் மட்டுமே முதல் இடத்தைப் பிடித்துள்ளனர்.

நீட் தேர்வு என்பது இளங்கலை மருத்துவம் மற்றும் இளங்கலை அறுவை சிகிச்சை (MBBS), இளங்கலை பல் அறுவை சிகிச்சை (BDS), இளங்கலை ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை (BAMS), இளங்கலை சித்த மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை (BSMS), இளங்கலை யுனானி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை (BUMS), மற்றும் இளங்கலை ஹோமியோபதி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை (BHMS) மற்றும் BSc (H) நர்சிங் படிப்புகள் ஆகியவற்றுக்கான நுழைவுத் தேர்வாகும். 

நீட் தேர்வு கட்-ஆஃப் பொதுப் பிரிவு இ.டபுள்யூ.எஸ் பிரிவினருக்கு கடந்த ஆண்டு 720-137 ஆக இருந்து இந்த ஆண்டு 720-164 ஆக உயர்ந்துள்ளது. பட்டியல் சாதி, பழங்குடி மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, கடந்த ஆண்டு 136-107 ஆக இருந்த நீட் கட்-ஆஃப் இந்த ஆண்டு 163-129 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல், எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓ.பி.சி பிரிவு மாற்றுத்திறனாளி (PH) விண்ணப்பதாரர்களுக்கான NEET UG 2024 கட் ஆஃப், கடந்த ஆண்டு 120-107 ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு 145-129 ஆக அதிகரித்துள்ளது. பொதுப் பிரிவு இ.டபுள்யூ.எஸ் பிரிவில் 11,65,904 மாணவர்கள் 50வது சதவீத பிரிவில் இடம் பெற்றுள்ளனர்.

நாட்டில் உள்ள 540க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் 80,000 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

NEET Exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment