/indian-express-tamil/media/media_files/2025/07/05/ai-smartphones-2025-07-05-13-38-28.jpg)
இந்திய அரசின் கல்வி அமைச்சகம், ஸ்வயம் (SWAYAM) தளத்தில் செயற்கை நுண்ணறிவு (AI)குறித்த ஐந்து இலவசப் படிப்புகளை வழங்குகிறது. வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவுத் துறையில் மாணவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ளவும், எதிர்காலத் தொழில்நுட்பப் பணிகளுக்குத் தயாராகவும் இந்தக் கல்வி வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
பள்ளி முதல் முதுகலை வரையிலான அனைத்து நிலை மாணவர்களுக்கும் உயர்தரக் கல்வியை இலவசமாக வழங்குவதே சுயம் தளத்தின் முக்கிய நோக்கம். இத்தகைய சூழலில், பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, இந்தப் படிப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சுயம் தளத்தில் உள்ள ஐந்து இலவச AI படிப்புகளின் விவரங்கள் பற்றி பார்ப்போம்.
பைதான் மொழியுடன் AI மற்றும் ML: இந்தப் படிப்பு செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் (Machine Learning) ஆகியவற்றின் அடிப்படைகளை அறிமுகப்படுத்துகிறது. புள்ளியியல், நேரியல் இயற்கணிதம் (Linear Algebra), தரவு காட்சிப்படுத்துதல் (Data Visualization), மற்றும் பைத்தான் (Python) மொழியின் பயன்பாடுகள் இதில் அடங்கும். இது 36 மணிநேரப் படிப்பு. முடிவில் சான்றிதழ் தேர்வு உண்டு.
AI உடன் கிரிக்கெட் பகுப்பாய்வு: ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர்களால் வழங்கப்படும் இந்தப் படிப்பு, கிரிக்கெட்டை ஒரு உதாரணமாகப் பயன்படுத்தி, விளையாட்டு பகுப்பாய்வின் அடிப்படைகளை பைதான் மூலம் கற்பிக்கிறது. இது 25 மணிநேரப் படிப்பு. முடிவில் பல்தேர்வு வினாக்கள் கொண்ட தேர்வு நடைபெறும்.
இயற்பியலில் AI: இயந்திர கற்றல் மற்றும் நியூரல் நெட்வொர்க்ஸ் (Neural Networks) மூலம் நிஜ உலக இயற்பியல் சிக்கல்களை எவ்வாறு தீர்ப்பது என்பதை இந்தப் படிப்பு விளக்குகிறது. இது 45 மணிநேரப் படிப்பு. இதில் பயிற்சி வகுப்புகள், செயல்முறை எடுத்துக்காட்டுகள் மற்றும் ஆய்வகப் பயிற்சிகள் ஆகியவை அடங்கும்.
கணக்கியலில் AI: வர்த்தகம் மற்றும் மேலாண்மைப் பிரிவு மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்தப் படிப்பு, கணக்கியல் நடைமுறைகளில் செயற்கை நுண்ணறிவை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை விளக்குகிறது. இது 45 மணிநேரப் படிப்பு. முடிவில் சான்றிதழ் தேர்வு உண்டு.
வேதியியலில் AI: ஐஐடி மெட்ராஸ் வழங்கும் இந்தப் படிப்பு, நிஜ உலக வேதியியல் தரவுகளைப் பயன்படுத்தி, செயற்கை நுண்ணறிவும் பைதான் மொழியும் எவ்வாறு மூலக்கூறு பண்புகளைக் கணிக்கவும், வினைகளை மாதிரியாக்கவும், மருந்துகளை வடிவமைக்கவும் உதவுகின்றன என்பதை விளக்குகிறது. இது 45 மணிநேரப் படிப்பு.
இந்த இலவசப் படிப்புகள், மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு குறித்த ஆழமான அறிவையும், எதிர்காலத் தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்கத் தேவையான திறன்களையும் வழங்குகின்றன. ஸ்வயம் தளம் மூலம் வழங்கப்படும் இந்த வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்தி, தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.