/indian-express-tamil/media/media_files/2025/05/12/oXI8QVWZyVK9vu2qzT6H.jpg)
எம்.டெக் படிப்புகளில் குறைந்து வரும் ஆர்வத்தை சமாளிக்க, இந்தியாவின் தொழில்நுட்பக் கல்வி ஒழுங்குமுறை அமைப்பான அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE), மாணவர்களுக்கு வழங்கப்படும் முதுகலை உதவித்தொகையை உயர்த்துவது குறித்து ஆலோசித்து வருகிறது.
இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்
மாதத்திற்கு ரூ.12,400 இலிருந்து 50% உயர்த்தப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சகத்திற்கு ஏ.ஐ.சி.டி.இ முன்மொழிந்துள்ளது.
முதுகலை மாணவர்களுக்கான உதவித்தொகை தொகையை குறைந்தபட்சம் ரூ.18,600 ஆக அதிகரிக்க வேண்டும் என்று ஏ.ஐ.சி.டி.இ கடந்த ஆண்டு ஜூன் மாதம் கல்வி அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியது, அதாவது 50% உயர்வை முன்மொழிந்தது. கடைசியாக உதவித்தொகை அதிகரிப்பு 2015 இல் கல்வி அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது என்பதும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த விஷயத்தில் ஒரு நினைவூட்டல் இந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் நிதி உதவிக்கான திட்டங்கள் உள்ளிட்ட பிற பரிந்துரைகளுடன் கல்வி அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது.
பிப்ரவரி 18, 2015 தேதியிட்ட ஒரு கடிதத்தில், கல்வி அமைச்சகம் ஏ.ஐ.சி.டி.இ மற்றும் ஐ.ஐ.டி.,கள், என்.ஐ.டி.,கள் மற்றும் ஐ.ஐ.எஸ்.இ.ஆர்.,கள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு கடிதம் எழுதி, ஏ.ஐ.சி.இ.டி-ஆல் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் மத்திய நிதியுதவி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்களில் பி.ஹெச்.டி (PhD) மற்றும் எம்.டெக்/ எம்.இ (MTech/ME) படிப்புகளுக்கான உதவித்தொகை விகிதங்களில் திருத்தம் குறித்து தெரிவித்தது. எம்.டெக் படிப்புகளுக்கு, உதவித்தொகை மாதத்திற்கு ரூ.8000 லிருந்து ரூ.12,400 ஆக உயர்த்தப்பட்டது. அப்போது தோராயமாக 50% அதிகரிப்பாக இருந்ததை அடிப்படையாகக் கொண்டு, இந்த முறையும் இதேபோன்ற 50% உயர்வை ஏ.ஐ.சி.டி.இ கோரியுள்ளது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் கல்வி அமைச்சகத்திற்கு அனுப்பிய கடிதத்தில், ஏ.ஐ.சி.டி.இ-ஆல் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் முதுகலை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் சேர்க்கை குறைந்து வருவதாக ஏ.ஐ.சி.டி.இ குறிப்பிட்டுள்ளது.
முதுகலை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட மாணவர் சேர்க்கை 2018-19 ஆம் ஆண்டில் 1.81 லட்சத்திலிருந்து 2023-24 ஆம் ஆண்டில் சுமார் 1.30 லட்சமாகக் குறைந்துள்ளதாக, கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏ.ஐ.சி.டி.இ தரவு காட்டுகிறது. இந்தக் காலகட்டத்தில், சேர்க்கை சுமார் 66,862 இலிருந்து (2018-19 ஆம் ஆண்டில் 63% இடங்கள் காலியாக இருந்தன) 44,000 க்கும் சற்று அதிகமாகக் குறைந்துள்ளது (2022-23 ஆம் ஆண்டில் 66% இடங்கள் காலியாக இருந்தன).
உதவித்தொகை திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட மொத்த முதுகலை மாணவர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட சரிவையும் ஏ.ஐ.சி.டி.இ குறிப்பிட்டுள்ளது - இந்த எண்ணிக்கை 2018-19 ஆம் ஆண்டில் 11,926 இல் இருந்து 2022-23 ஆம் ஆண்டில் 5176 ஆகக் குறைந்துள்ளது.
முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான உதவித்தொகைகளுக்கு, மாணவர்கள் GATE (Graduate Aptitude Test in Engineering) தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும். இந்த உதவித்தொகை ஏ.ஐ.சி.டி.இ-ஆல் அங்கீகரிக்கப்பட்ட முதுகலை படிப்புகள் மற்றும் ஏ.ஐ.சி.டி.இ-ஆல் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் சேரும் மாணவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். உதவித்தொகைகளின் எண்ணிக்கை ஏ.ஐ.சி.டி.இ-ஆல் அங்கீகரிக்கப்பட்ட படிப்புக்கான சேர்க்கைக்கு மட்டுமே இருக்கும். பிற ஆதாரங்களில் இருந்து நிதி உதவி பெறும் மாணவர்கள், அல்லது "ஸ்பான்சர் செய்யப்பட்ட மாணவர்கள்" மற்றும் மேனேஜ்மெண்ட் ஒதுக்கீட்டின் மூலம் சேர்க்கப்பட்ட மாணவர்கள் உதவித்தொகைக்கு தகுதியற்றவர்கள்.
உதவித்தொகை தொகையை உயர்த்தக் கோருவதோடு மட்டுமல்லாமல், ஏ.ஐ.சி.டி.இ-ஆல் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் இருந்து GATE தேர்வு எழுதாமல், 8.5 அல்லது அதற்கு மேல் CGPA மதிப்பெண் பெற்ற பட்டதாரி மாணவர்களுக்கு முதுகலை உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும் ஏ.ஐ.சி.டி.இ கேட்டுக் கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் ஏ.ஐ.சி.டி.இ நடத்திய நிபுணர் குழு கூட்டத்தைப் பற்றி குறிப்பிடுகையில், மாதத்திற்கு ரூ.12,400 உதவித்தொகை என்பது "மிகக்குறைவு" என்று நிபுணர்கள் "பரிந்துரைத்தனர்" என்றும், எனவே, ஏ.ஐ.சி.டி.இ கல்வி அமைச்சகத்திடம் உதவித்தொகையை அதிகரிக்கக் கோரலாம் என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூனியர் ரிசர்ச் ஃபெலோஸ் (JRF) மற்றும் சீனியர் ரிசர்ச் ஃபெலோஸ் (SRF) ஆகியோருக்கான தொகை 2023 ஆம் ஆண்டில் ரூ. 31,000 லிருந்து ரூ. 37,000 (JRF) ஆகவும், ரூ. 35,000 லிருந்து ரூ. 42,000 (SRF) ஆகவும் உயர்த்தப்பட்டதை கடிதம் சுட்டிக்காட்டியது.
எம்.டெக் படிப்புகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவது கவலைக்குரியதாக இருப்பதாகவும், பொறியியல் துறையில் ஆசிரியர் பணிகளுக்கு முதுகலை பட்டம் முக்கியமானது என்றும் ஏ.ஐ.சி.டி.இ வட்டாரங்கள் தெரிவித்தன. குறைந்து வரும் ஆர்வத்திற்கு, பி.டெக் முடித்தவுடன் மாணவர்கள் வேலை தேடுவது அல்லது உயர் படிப்புக்காக வெளிநாடு செல்வது உள்ளிட்ட காரணங்களை வட்டாரங்கள் சுட்டிக்காட்டினர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.