/indian-express-tamil/media/media_files/2025/08/25/national-teacher-award-2025-08-25-16-36-36.jpg)
2025 ஆம் ஆண்டுக்கான தேசிய ஆசிரியர் விருதுக்கு தமிழ்நாட்டை சேர்ந்த இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவருக்கும் விருது வழங்கப்படுகிறது.
இந்தியாவின் கல்வித் துறைக்கு அரும்பங்காற்றிய ஆசிரியர்களை அங்கீகரிக்கும் வகையில், மத்திய கல்வி அமைச்சகம் ஆண்டுதோறும் தேசிய ஆசிரியர் விருதுகளை வழங்கி வருகிறது. தேசிய ஆசிரியர் விருது, செப்டம்பர் 5, ஆசிரியர் தினத்தன்று குடியரசுத் தலைவரால் வழங்கப்படுகிறது. தேசிய நல்லாசிரியர் விருது பெறுபவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் மற்றும் வெள்ளி பதக்கம், சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த விருது, ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு, புதுமையான கற்பித்தல் முறைகள், மற்றும் சமூக மேம்பாட்டுக்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்புகளை அங்கீகரிக்கிறது.
இந்தநிலையில் இந்த ஆண்டு நாடு முழுவதும், 45 ஆசிரியர்கள் தேசிய ஆசிரியர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழ்நாட்டில் இருந்து 2 ஆசிரியர்களும் அடங்குவர். சென்னை மயிலாப்பூர் தனியார் பள்ளி ஆசிரியை ரேவதி, திருப்பூர் அரசு பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி ஆகியோர் தேசிய ஆசிரியர் விருதுக்காக தேர்வாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் புதுச்சேரி தில்லையாடி வள்ளியம்மை பள்ளியை சேர்ந்த ரெக்ஸ் (எ) ராதாகிருஷ்ணன் என்ற ஆசிரியருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாப்பூர் தனியார் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை ரேவதி, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கற்பிப்பதில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார். திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள பாரதியார் நூற்றாண்டு அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக இருந்து வருகிறார். மேலும் பள்ளி இடைநிற்றலைக் குறைக்கவும் செயலாற்றி வருகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.