நீட் தேர்வு செப்டம்பர் 12 அன்று நடைபெற்றது. நாடு முழுவதும் 15 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வு எழுதினர். அதன்படி, நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி எப்போது அறிவிக்கப்படும் என மாணவர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் வெளியிட தயார் நிலையில் இருந்தும், எங்களால் வெளியிட முடியவில்லை என என்டிஏ அதிகாரிகள் கூறியுள்ளது நீட் விண்ணப்பதாரர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அவசர வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றத்தை என்டிஏ அணுகியுள்ளது.
ஏனென்றால், மகாராஷ்டிாவில் நீட் தேர்வு நடைபெற்ற மையம் ஒன்றில், இரண்டு மாணவர்களுக்கு வினாத்தாள் மற்றும் OMR sheet மாற்றி கொடுக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான வழக்கை கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட இரண்டு மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தி, அவர்களுக்கும் சேர்த்து தான், நீட் தேர்வு முடிவை அறிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இந்த அறிவிப்பால், நீட் தேர்வு முடிவுகள் அறிவிப்பதில் தாமதம் ஏற்படும். எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஏஎம்எஸ், பிஎஸ்எம்எஸ், பியூஎம்எஸ் மற்றும் பிஎச்எம்எஸ் போன்ற இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை செயல்முறை பாதிக்கப்படும் என உச்ச நீதிமன்றத்தில் என்டிஏ தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீட் தேர்வில், தேர்வர்களுக்கு ஒரே குறியீடுகள் மற்றும் ஏழு இலக்க வரிசை எண்கள் கொண்ட வினாத்தாள்கள், OMR ஷிட்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், தேர்வு கண்காணிப்பாளர்கள் இரண்டையும் மாற்றி கொடுத்தாக மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "வினாத்தாள், OMR ஷீட் குறியீடு மாறுபட்டது இருப்பது குறித்து உடனடியாக கண்காணிப்பாளரிடம் தேர்வர்கள் கூறியுள்ளனர். ஆனால், அவர் அதைப் பொருட்படுத்தாமல், தேர்வு அறையில் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துவதாகப் புகார் அளிக்கப்படும் என மிரட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
அப்போது, என்டிஏ சார்பில் ஆஜரான வழக்கறிஞர், " மாணவர்கள் மீண்டும் நீட் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட மாட்டாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, "தேர்வு நடத்துபவர் செய்த தவறால், மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது. இருவருக்கும் மீண்டும் நீட் தேர்வு நடத்தி, இரண்டு வாரங்களுக்குள் அனைவருக்கும் ஒன்றாக தேர்வு முடிவை வெளியிட வேண்டும்" என தீர்ப்பளித்துள்ளார்.
இந்த தீர்ப்பை சுட்டிக்காட்டிய என்டிஏ, மனுதாரர்களின் புகாரில் முரண்பாடுகள் இருப்பதாகவும், மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு எதிர்காலத்தில் தேர்வர்களுக்குத் தவறான முன்னுதாரணமாக அமையும்" என குறிப்பிட்டுள்ளனர்.
தீபாவளிக்கு முன்பு நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் வரவிருக்கும் அவசர விசாரணையில் தான் தேர்வு முடிவு வெளியிடுவது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிகிறது. ஆண்டுதோறும் தேர்வு நடந்து ஒரு மாதத்திற்குள் முடிவுகள் வெளியான நிலையில், இந்த முறை தான் 45 நாள்கள் தாண்டியும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil