/indian-express-tamil/media/media_files/2025/04/07/TXjoMldLL9EigrUnskaH.jpg)
2025-ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வு மே 4-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்காக ஏராளமான மாணவர்கள், தங்களை திறம்பட மெருகேற்றி வருகின்றனர். இந்த சூழலில், நீட் தேர்வில் கேட்கப்படுவதற்கு வாய்ப்பிருக்கும் கேள்விகள் குறித்தும், இதற்கு மாணவர்கள் எவ்வாறு தயாராகலாம் என்றும் கல்வியாளர் செந்தில் நாதன் குறிப்பிட்டுள்ளார்.
என்.சி.இ.ஆர்.டி பாடத்திட்டத்திற்கு வெளியே இருந்து சில பிரிவுகளின் கீழ் கேள்விகள் கேட்கப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதன்படி, Malvaceae, Cruciferae, Leguminosae, Compositae மற்றும் Gramineae போன்றவற்றை கவனமாக படிக்க வேண்டும். என்.சி.இ.ஆர்.டி-யில் இல்லாத எந்தவொரு கேள்வியையும் 2014 முதல் 2024 வரை நடத்தப்பட்ட தேர்வுகளில் கேட்கப்படவில்லை என்று செந்தில் நாதன் தெரிவித்துள்ளார்.
கரப்பான் பூச்சி மற்றும் தவளை தொடர்பான கேள்விகளை Animals structural organisation-ல் இருந்து கட்டாயம் படிக்க வேண்டும். இது தவிர, கடந்த 8 முதல் 10 ஆண்டுகளில் கேட்கப்பட்ட முந்தைய ஆண்டு கேள்விகளையும் மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் எந்த பாடங்களில் இருந்து அதிக முக்கியத்துவம் கொடுத்து கேள்விகள் கேட்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ள முடியும்.
இதேபோல், ஒரு மாணவர் அல்லது மாணவி குறைந்தபட்சம் 10 மாக் டெஸ்ட் எழுதி இருக்க வேண்டும் என்று செந்தில் நாதன் அறிவுறுத்துகிறார். இதன் மூலம் எந்தக் பகுதி கேள்விகள் கடினமாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். தேர்வு நடைபெறுவதற்கு சுமார் 30 நாட்களுக்கு முன்பாக ஆன்லைன் வீடியோக்களை பார்த்து படிப்பதை தவிர்க்க வேண்டும்.
இதேபோல், குழுவாக இணைந்து மாணவர்கள் படிக்க வேண்டாம் என்று கல்வியாளர் செந்தில் நாதன் அறிவுறுத்துகிறார். தற்போது நீட் தேர்வு 180 கேள்விகளுடன் 3 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், எந்த அளவிற்கு கடினமாக இருக்கும் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
இது தவிர நீட் தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் அனைவரும் 650 முதல் 720 மதிப்பெண்களை குறிக்கோளாகக் கொண்டு படிக்க வேண்டும். பயிற்சி மையங்களில் நடத்தப்பட்ட தேர்வுகளில் மாணவர்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றிருந்தால் கவலைப்பட தேவையில்லை. ஏனெனில், இங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் யாரும் நீட் தேர்வு வினாக்களை தேர்ந்தெடுப்பது இல்லை என்று கல்வியாளர் செந்தில் நாதன் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு நாளும் உயிரியல், வேதியியல், இயற்பியல் என அனைத்து பாடங்களுக்கும் சம அளவு முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும். இவ்வாறு படிக்கும் போது பாடங்கள் மறந்து போவதை தவிர்க்க முடியும் என்று கல்வியாளர் செந்தில் நாதன் பரிந்துரைக்கிறார்.
நன்றி - Biology Simplified Tamil Youtube Channel
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.