/indian-express-tamil/media/media_files/2025/02/08/GR3oPVj8Iq9Wi04DOf4J.jpg)
இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு விண்ணப்பங்கள் விரைவில் அறிவிக்கப்படுகிறது. இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்பதற்கு தயாராக இருக்கின்றனர். இந்நிலையில், தேர்வுக்கான விண்ணப்பம் பதிவேற்றும் போது மாணவர்கள் தவிர்க்க வேண்டிய சில தவறுகளை கல்வியாளர் செந்தில்நாதன் சுட்டிக்காட்டியுள்ளார். அவற்றை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
அதன்படி, விண்ணப்பதாரர் பெயரில் மாணவர்களின் 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் இருப்பதை போன்று தான் நிரப்ப வேண்டும். நீட் அட்மிட் கார்ட், நீட் ஸ்கோர் கார்ட் போன்றவற்றிலும் இதே பெயர் தான் குறிப்பிடப்பட்டிருக்கும். இதில் இருக்கும் மதிப்பெண்கள் கொண்டு தான் கவுன்சிலிங்கில் பரிசீலிக்கப்படும். அப்போது, 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் இருக்கும் பெயரும், நீட் விண்ணப்பத்தில் இருக்கும் பெயரும் ஒரே மாதிரியாக இருத்தல் அவசியம்.
இதனடிப்படையில், 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் இருக்கும் பெயர் மற்றும் பிறந்த தேதி, ஆதார் அட்டையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஏனெனில், ஆதார் விவரங்களை நீட் விண்ணப்பம் அப்படியே எடுத்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கலாம். அதனால், ஆதார் அட்டையில் மாற்றம் செய்ய வேண்டுமென்றால் விரைவாக முடித்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல், சாதிச் சான்றிதழில் இருக்கும் விவரங்களை சரியாக விண்ணப்பித்திருக்க வேண்டும். இது இடஒதுக்கீடு தொடர்பான சலுகைகளை சரியாக பெற உதவி செய்யும். மேலும், நீட் தேர்வில் விரல் ரேகை பதிவு செய்வதில், 10 கை விரல்களின் ரேகைகளையும் பதிவு செய்திருக்க வேண்டும். மற்ற தேர்வுகளை போன்று ஒரே ஒரு விரலின் ரேகை பதிவு செய்வது இதில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
இந்த விண்ணப்பத்தில் கோட் என ஒரு பகுதி வரும். இதில் 12-ஆம் வகுப்பு முடித்து முதன்முறையாக தேர்வு எழுதுபவர்கள் 01 எனக் குறிப்பிட வேண்டும். ஏற்கனவே, நீட் தீர்வு எழுதியிருந்தால் 02 எனக் குறுப்பிட வேண்டும். ஆனால், கோட் பகுதியில் மாற்றி குறிப்பிட்டாலும் பாதிப்பு வராது என்று கூறப்பட்டுள்ளது. புகைப்படங்களை பதிவேற்றும் போது JPEG வடிவத்தில் வைத்திருப்போம். இவை ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றால், JPG வடிவத்திலான புகைப்படங்களை பதிவேற்றலாம்.
இவ்வாறு பதிவேற்றப்படும் விண்ணப்பங்களில் புகைப்படம் அல்லது கையெழுத்து ஆகியவை சரியாக இல்லாவிட்டால், அவற்றை சீரமைக்கக் கோரி மாணவர்களுக்கு இ-மெயில் மூலமாக தகவல் அளிக்கப்படும். எனவே, அவை குறித்து கவலைப்பட தேவையில்லை. கண்டிப்பாக தேர்வு கட்டணத்தை உரிய முறையில் செலுத்திவிட வேண்டும்.
நீட் தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், இவை அனைத்தையும் நினைவில் கொள்ள வேண்டும் என கல்வியாளர் செந்தில்நாதன் அறிவுறுத்தியுள்ளார்.
நன்றி - Biology Simplified Tamil Youtube Channel
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.