லட்சக்கணக்கான மாணவர்கள் ஆவலோடு காத்திருந்த நீட் 2021 தேர்வு முடிவுகள் நேற்று மாலை வெளியானது. தேர்வு முடிவுகள், மாணவர்களின் தனிப்பட்ட மின்னஞ்சல்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.மேலும், நீட் தேர்வு முடிவுகளை neet.nta.nic.in என்ற இணையதளத்தில் சென்று மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்.
தெலங்கானாவை சேர்ந்த மிரினால் குட்டேரி, மகாராஷ்டிராவைச் சேர்ந்த கார்த்திகா நாயர், டெல்லியை சேர்ந்த தன்மயி குப்தா ஆகிய மூவரும் அகில இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளனர்.
அந்த வகையில், 9 ஆம் வகுப்பில் மருத்துவராக மாறி சமூகத்திற்குச் சேவையாற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் படித்து, நீட் தேர்வில் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்ற மிரினால் குட்டேரியை குறித்து தான் இச்செய்தி தொகுப்பில் பார்க்கப்போகிறோம்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த மிரினால், நீட் தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவரது தந்தை ஹெச்ஆர் கன்சல்டன்ட் மற்றும் அவரது தாயார் சாப்ட்வேர் இன்ஜினியர் ஆவர்.
இதுகுறித்து பேசிய மிரினா், " தினமும் படிப்பதில் கவனம் செலுத்துவது, அவ்வப்போது இடைவெளி எடுப்பது என்ற சமநிலையான வழக்கத்தைக் கொண்டிருந்ததால், நீட் தேர்வில் சிறப்பாக செயல்பட முடிந்தது. நீட் தேர்வுக்கு தயாராகும் போது எனது பொழுதுபோக்கை விட்டுவிடவில்லை. அப்படி செய்தால், நமது படிப்பின் ஆற்றல் தான் குறையும் என கருதுகிறேன்" என்றார்.
கொரோனா சமயத்தில் நீட் தேர்வுக்கு தயாரான விதம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அவர், "லாக்டவுன் காலம் இரண்டு கூர்மையான வாள் போல் இருந்தது. பயணங்களால் நேரம் வீணாகவில்லை. அதே சமயம், வீட்டிலிருந்தபடியே படிப்பது கவனத்தை சிதறடிக்கும். எனவே, அதற்கேற்ற சூழ்நிலையை உருவாக்கிக்கொண்டேன். நீட் தேர்வுக்கு முந்தைய மாதத்தில் நண்பர்களுடனான தொடர்புகளைக் குறைத்துக்கொண்டேன். அதற்காக, வெளியுலகத்துடனான தொடர்பை முற்றிலுமாக குறைக்கவில்லை" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், " ஆரம்பத்தில் ஆகாஷ் இன்ஸ்டிடியூட் வழங்கிய NCERT தயாரிப்புகள் முழுமையாக படிப்பதற்கு போதுமானதாக இருந்தது. அதன் பின்னர், 45 நிமிடங்களுக்குக் கவனமாகப் படிப்பதும், 10 முதல் 15 நிமிடங்களுக்குப் புத்துணர்ச்சியூட்டும் ஓய்வு எடுக்கும் வழக்கத்தையும் பழகிக்கொண்டேன். அது, மிகவும் உபயோகமாக இருந்ததும். விரைவாகப் பாடத்தினை படிக்க முடிந்தது என்றார்.
பிரேக் என்றால் பெரும்பாலும் வீடியோ கேம்கள் விளையாடுவது அல்லது டிவி பார்ப்பது தான் என கூறுகிறார்.
நீட் தேர்வு செப்டம்பர் 12 அன்று நடைபெற்றது. சுமார் 16 லட்சம் பேர் தேர்வு எழுதினர். விரைவில், நீட் கவுன்சிலிங் பிராசஸ் தொடங்கவுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil