தேர்வுக்கு படிக்க போதிய கால அவகாசம் இல்லாததால், நீட் (NEET UG) தேர்வை குறைந்தது ஒரு மாதமாவது ஒத்திவைக்க வேண்டும் என்று தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் ட்விட்டர் மூலம் பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இளங்கலை மருத்துவப் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கான (NEET UG) பதிவு செயல்முறை ஏப்ரல் 15 அன்று முடிவடைந்தது. இந்த ஆண்டு, நீட் தேர்வு மே 7, 2023 அன்று இந்தியா முழுவதும் மற்றும் இந்தியாவிற்கு வெளியே உள்ள சுமார் 499 நகரங்களில் பேனா மற்றும் பேப்பர் முறையில் (ஆஃப்லைனில்) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனையடுத்து தேசிய தேர்வு முகமை (NTA) விரைவில் நீட் தேர்வுக்கான அனுமதி அட்டைகள் மற்றும் முன்கூட்டியே தகவல் சீட்டை வெளியிட உள்ளது.
இதையும் படியுங்கள்: NEET UG 2023; நீட் தேர்வில் அதிக மதிப்பெண் வேண்டுமா? கண்டிப்பாக இதைச் செய்யுங்கள்!
இந்தநிலையில், இளநிலை மருத்துவ நுழைவுத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. நீட் தேர்வை குறைந்தது ஒரு மாதமாவது ஒத்திவைக்க வேண்டும் என்று மாணவர்கள் ட்விட்டரில் எழுதி வருகின்றனர். மேலும் நீட் தேர்வை ஒத்திவைக்க கோரி பிரதமர் மோடிக்கு மனுக்களை அனுப்பி வருகின்றனர்.
நீட் நுழைவுத் தேர்வை 21 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதவுள்ளனர். நீட் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள், மாநில வாரியத் தேர்வுகளுக்கு கஷ்டப்பட்டு படித்து தற்போது தான் எழுதி முடித்துள்ள நிலையில், உடனடியாக நீட் தேர்வுக்கு படிக்க வேண்டிய தீவிர அழுத்தத்தில் உள்ளனர், எனவே நீட் தேர்வை ஓரிரு மாதங்களுக்கு ஒத்திவைக்க சமூக ஊடக தளங்களை நாடியுள்ளனர். மேலும், இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை குறித்தும் மாணவர்களும் பெற்றோர்களும் கவலை அடைந்துள்ளனர்.
வழக்கமாக, NTA தேர்வுக்கு 15-20 நாட்களுக்கு முன்பு நீட் தேர்வுக்கான அனுமதி அட்டையை வெளியிடுகிறது, அதாவது இந்த வாரம் எந்த நேரத்திலும் நீட் தேர்வு நடைபெறும் நகரம் குறித்த தகவல் சீட்டை விண்ணப்பதாரர்கள் எதிர்பார்க்கலாம், மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளைப் பதிவிறக்க முடியும்.
NEET UG 2023: தேர்வு முறை
NEET UG 2023 தேர்வுத் தாள் இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகிய நான்கு பாடங்களைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு பாடமும் இரண்டு பிரிவுகளைக் கொண்டிருக்கும். பிரிவு A 35 கேள்விகளைக் கொண்டிருக்கும் மற்றும் பிரிவு B யில் 15 கேள்விகள் இருக்கும், இந்த 15 கேள்விகளில், விண்ணப்பதாரர்கள் ஏதேனும் 10 கேள்விகளை முயற்சி செய்ய தேர்வு செய்யலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil