இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG 2023) முடிவுகள் ஜூன் 13 ஆம் தேதி வெளியிடப்பட்ட பின்னர், தங்கள் மதிப்பெண்களில் குளறுபடிகள் இருப்பதாகக் கூறி, அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் முறையிட்டு வருகின்றனர்.
மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் சமூக ஊடக தளங்களில் தங்களின் OMR தாள்களைப் பகிர்வதன் மூலம் தங்கள் கவலைகளை எழுப்பியுள்ளனர். மேலும், இந்த முரண்பாடுகளுக்கு தேசிய தேர்வு முகமையிடம் (NTA) விளக்கம் கோரியுள்ளனர்.
இதையும் படியுங்கள்: எம்.பி.பி.எஸ் சேர்க்கை முறைகேடு; ரூ.2.7 கோடி நன்கொடை வசூலை டெபாசிட் செய்ய தனியார் மருத்துவ கல்லூரிக்கு ஐகோர்ட் உத்தரவு
ஜூன் 4 அன்று, தேசிய தேர்வு முகமை அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in இல் OMR தாள்களை (மாணவர்களின் அசல் விடைத்தாள்கள்) பதில் குறிப்புகளுடன் வெளியிட்டது. தேர்வர்கள் எழுப்பிய ஆட்சேபனைகளை பாட வல்லுநர்கள் முழுமையாக ஆய்வு செய்து நிவர்த்தி செய்த பிறகுதான் ஜூன் 13 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் அதற்குப் பிறகும், மாணவர்கள் தங்கள் OMR தாள்களில் உள்ள மதிப்பெண்கள் தங்கள் நீட் மதிப்பெண்களில் இருந்து கணிசமாக வேறுபடுவதை சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து ட்வீட் செய்துள்ள எம்.பி. சுப்ரியா சுலே, மாணவர்களின் கவலைகளை உடனடியாகத் தீர்க்குமாறு தேசிய தேர்வு முகமையிடம் கேட்டுக் கொண்டார். புனே மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மாணவியின் மதிப்பெண் அட்டையை எடுத்துக்காட்டி, “மாணவியின் OMR தாளில், தேசிய தேர்வு முகமையின் விடை குறிப்புடன் ஒப்பிடும் போது, 695 மதிப்பெண்கள் இருந்தது, அதே சமயம் அவரது ரிசல்ட் கார்டில் 95 மதிப்பெண்கள் என கணிசமாகக் குறைவாக இருந்தது. தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட ஓ.எம்.ஆர் தாளுக்கும் தேசிய தேர்வு முகமையிடமிருந்து மின்னஞ்சலில் தனக்கு கிடைத்த ஓ.எம்.ஆர் தாளுக்கும் இடையில் முரண்பாடுகள் இருப்பதாக” எம்.பி சுப்ரியா சுலே ட்வீட் செய்துள்ளார்.
"முரண்பாடுகளில் கண்காணிப்பாளர்களின் மாறுபட்ட கையொப்பங்கள், கையொப்பங்களின் நேரம் மற்றும் இரண்டு OMR தாள்களுக்கு இடையிலான கட்டைவிரல் பதிவுகளில் உள்ள வேறுபாடுகள் ஆகியவை அடங்கும். மேலும் OMR தாளில் குறிக்கப்பட்ட கேள்விகள் மற்றும் பதில்கள் அந்த மாணவி உடையது இல்லை. அந்த தாளில் அந்த மாணவி பதிவு எண்ணை எழுதவில்லை,” என்றும் எம்.பி சுப்ரியா சுலே ட்வீட் செய்துள்ளார்.
இதுபோல் பல்வேறு மாணவர்களும் மதிப்பெண்களில் குளறுபடி இருப்பதாக முறையிட்டுள்ளனர். இந்த மாணவர்கள் தங்கள் OMR இன் கார்பன் நகலை வழங்குமாறு கோரியுள்ளனர். ஆனால் தேசிய தேர்வு முகமை இதுவரை இந்த விவகாரம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil