நீட் நுழைவுத் தேர்வு நாளை (மே 5) நடைபெற உள்ள நிலையில் கடைசி நேரத்தில் மாணவர் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.
இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET 2024) நாளை நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இந்தியா முழுவதும் 557 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் நடைபெறும். சுமார் 23 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுத உள்ளனர்.
நீட் தேர்வில் தகுதி பெற்றால் தான், எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, கால்நடை மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் சேர்க்கை பெற முடியும். இந்த நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், கடைசி நேரத்தில் மாணவர்கள் செய்ய வேண்டியதை இப்போது பார்ப்போம்.
பதற்றம் வேண்டாம்
மாணவர்கள் தேர்வு குறித்து கவலை கொள்ள வேண்டாம், பதற்றம் வேண்டாம், அமைதியான மனநிலையில் இயல்பாக இருங்கள். நீங்கள் இதுவரை படித்தவற்றை, குறிப்பாக குறிப்பு எடுத்தவற்றை திருப்பிப் பாருங்கள்.
பலவீனமான பகுதிகளில் கவனம் செலுத்துங்கள்
நீங்கள் நீட் தேர்வுக்கு இதுவரை சிறந்த முறையில் தயார் ஆகியிருப்பீர்கள். உங்களுக்கு கடினமான, பலவீனமான பகுதிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தி படியுங்கள். சூத்திரங்கள், அறிவியல் பெயர்கள் சமன்பாடுகள் போன்றவற்றை நினைவுபடுத்தி பாருங்கள். சந்தேகங்களுக்கு பாடப் புத்தகங்களில் மட்டும் தீர்வை தேடுங்கள். பிற ஆதாரங்களிலில் தீர்வைத் தேடி குழப்பிக் கொள்ள வேண்டும்.
மாதிரித் தேர்வு
உங்கள் திருப்புதலுக்கு இடையில் நேரம் இருந்தால், மாதிரித் தேர்வை முயற்சி செய்யுங்கள். முந்தைய ஆண்டு வினாத் தாள்களை பயிற்சி செய்து பாருங்கள்.
அதிக வெயிட்டேஜ் பாடங்களுக்கு முக்கியத்துவம்
அதிக வெயிட்டேஜ் உள்ள பகுதிகளுக்கு கடைசி நேரத்தில் அதிக முக்கியத்துவம் கொடுங்கள். ஒவ்வொரு பாடத்திலும், எந்தெந்த அத்தியாயங்களில் இருந்து அதிக கேள்விகள் வந்துள்ளன என தெரிந்துக் கொண்டு அவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள்.
ஹால் டிக்கெட் மறக்காதீர்கள்
அடுத்ததாக தேர்வு மையத்திற்கு, குறித்த நேரத்திற்கு அரை மணி முன்னதாகவே சென்று விடுங்கள். நீட் தேர்வு வழிகாட்டுதல்களில் கொடுக்கப்பட்டுள்ள ஆடைக் கட்டுப்பாட்டை பின்பற்றுங்கள். ஹால் டிக்கெட், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, பேனா உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்லுங்கள். தடை செய்யப்பட்ட பொருட்களை உடன் எடுத்துச் செல்லாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள்.
இறுதியாக, நீங்கள் படித்தவற்றில் இருந்து தான் கேள்வி வரும். எனவே பயப்படாமல், வினாத்தாளை எதிர்கொள்ளுங்கள். ஒவ்வொரு கேள்வியையும் ஒருமுறைக்கு இருமுறை படித்துப் பார்த்து விடையளியுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“