நீட் தேர்வு நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில், தேர்வு சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் கூறுகின்றனர். ஒவ்வொரு பாட வாரியாக மாணவர்கள் தெரிவித்த கருத்துக்களை இப்போது பார்ப்போம்.
இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வு (NEET UG 2025) இன்று (மே 4) நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த நீட் தேர்வு எம்.பி.பி.எஸ் (MBBS), பி.டி.எஸ் (BDS), ஆயுர்வேதம் (BAMS), யுனானி (BUMS), ஹோமியோபதி (BHMS) மற்றும் சித்தா (BSMS) போன்ற இளங்கலை மருத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய படிப்புகளில் சேருவதற்கான ஒரே நுழைவுத் தேர்வாக செயல்படுகிறது.
இந்தியா முழுவதும் சுமார் 22.7 லட்சம் விண்ணப்பதாரர்கள் நீட் தேர்வை எழுதினர். நீட் தேர்வு 500க்கும் மேற்பட்ட நகரங்களில் 5453 தேர்வு மையங்களில் நடைபெற்றது. நீட் தேர்வு பேனா மற்றும் பேப்பர் முறையில், மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெற்றது. நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல் பாடங்களில் இருந்து தலா 45 கேள்விகள் மற்றும் உயிரியியல் பாடத்தில் இருந்து 90 கேள்விகள் என மொத்தம் 180 கேள்விகள் இடம்பெறும். மொத்த மதிப்பெண் 720.
இந்தநிலையில், நீட் தேர்வு முடிந்து வெளியில் வந்த மாணவர்கள் தேர்வு சற்று கடினமாக இருந்ததாக கருத்து தெரிவிக்கின்றனர். குறிப்பாக வேதியியல் பகுதி வினாக்களில் என்.சி.இ.ஆர்.டி புத்தகங்களில் இருந்து நேரடியாக வினாக்கள் இடம்பெறாமல், வேதி சமன்பாடுகள் குழப்பமாக கடினமாக கேட்கப்பட்டிருந்தன. வேதிச் சமன்பாடுகளில் தனிமங்கள் மாற்றம் செய்யப்பட்டு வினாக்கள் இடம்பெற்றிருந்தன. நேரடி கேள்விகள் இல்லாததால் பதிலளிக்க சற்று சிரமமாக இருந்தது.
இயற்பியல் பகுதியில் கணக்கீடு அதாவது கால்குலேஷன் தேவைப்படும் கேள்விகள் அதிகமாக கேட்கப்பட்டிருந்தன. மொத்தம் உள்ள 45 வினாக்களில் கிட்டத்தட்ட 40 வினாக்களுக்கு கால்குலேஷன் செய்ய வேண்டியிருந்தது. 5 கேள்விகளே நேரடியாக விடையளிக்கும் வகையில் இருந்தது. இதனால் விடையளிக்க கடினமாக இருந்தது.
உயிரியியல் பகுதி இயற்பியல், வேதியியலை விட சற்று எளிதாக இருந்தாலும், கேள்விகள் நீளமானதாக இருந்தது. இதனால் பதிலளிக்க அதிக நேரம் தேவைப்பட்டது. இதனால் உயிரியல் பகுதியை விரைவாக முடிக்க முடியவில்லை என்றும் மாணவர்கள் கூறுகின்றனர்.