தேசிய தேர்வு முகமை (NTA) மே 4 ஆம் தேதி தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு இளங்கலை (NEET UG) தேர்வை நடத்தவுள்ளது. நீட் தேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் அதே வேளையில், தேர்வர்கள் மே 4 ஆம் தேதி மதியம் 1.30 மணிக்குள் தேர்வு மையத்தை அடைந்து உள்ளே நுழைய வேண்டும். அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கமான neet.nta.nic.in இல் வெளியிடப்பட்ட ஹால் டிக்கெட்களில் நீட் தேர்வு மைய விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. நீட் தேர்வு கையேட்டில் அட்டைப் பக்கத்தின் மேல் எழுதப்பட்டிருக்கும் அனைத்து பக்கங்களும் உள்ளதா என்பதை மாணவர்கள் சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் நீட் தேர்வு ஹால் டிக்கெட்டுகளை தேர்வு மையத்திற்கு கட்டாயமாக எடுத்துச் செல்ல வேண்டும். நீட் தேர்வு அட்மிட் கார்டுகளுடன், விண்ணப்பப் படிவத்தில் பதிவேற்றப்பட்டுள்ள அதே இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், வெள்ளை பின்னணியுடன் கூடிய ஒரு தபால் அட்டை அளவு (4”X6”) வண்ண புகைப்படம் மற்றும் ஒரு அரசாங்க அடையாள அட்டையை தேர்வு மையத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
அதேநேரம், நீட் தேர்வுக்கு மாணவர்கள் சில ஆடைக் கட்டுபாடுகளை பின்பற்ற வேண்டுமென தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. அந்த வகையில் தேசிய தேர்வு முகமை அறிவிப்பின்படி, சாதாரண கண்ணாடி அணிந்து செல்லலாம். ஆண்கள் அரைக்கை சட்டை அல்லது டி-சர்ட் அணிந்து செல்லலாம். டி-சர்ட்டில் எதுவும் பிரிண்ட் செய்து இருக்க கூடாது. மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட பாக்கெட்கள் இருந்தால் அனுமதிக்கப்படாது. சாதாரண பேண்ட், டிராக் பேண்ட் அணிந்து செல்லலாம். பெரிய பட்டன் மற்றும் அதிகமான பாக்கெட்கள் இருக்க கூடாது.
பெண்கள் அரைக்கை டாப்ஸ் அணிந்து செல்லலாம். ஷால் அணிந்து செல்ல முடியாது. டி-சர்ட், லெக்கிங், சாதாரண பேண்ட், டிராக் பேண்ட் போன்றவை அனுமதிக்கப்படும்.
ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவருக்கும் சாதாரண செருப்புகள் அனுமதிக்கப்படும். ஷூ போன்ற, மூடிய செருப்புகள் அனுமதிக்கபடாது.
மேலும் நீட் தேர்வு மையத்திற்குள் எடுத்துச் செல்ல முடியாத தடை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலையும் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. அதன்படி, பர்ஸ் அல்லது வாலட், ஹேர்பின், கைக் கடிகாரம், தோடு, கூலிங் கிளாஸ், தொப்பி, ஸ்மார்ட் பேண்ட், பாசி, செயின், ஷூ, ஹீல்ஸ் போன்றவை அனுமதிக்கப்படாது. உடலில் ஆபரணங்கள் எதுவும் அணிந்து செல்ல அனுமதிக்கப்படாது.
அவசியமான, மதரீதியான ஆபரணங்கள், உடைகள் அணிந்து செல்ல வேண்டும் என்றால், 12.30க்கு முன்னதாக தேர்வு மையத்திற்கு சென்று விளக்கம் அளிக்க வேண்டும்.
மேலும், தொலைபேசி, ஹெட்போன், இயர்போன், பேனா, கால்குலேட்டர், குறிப்பேடு, பெல்ட், ஹேண்ட் பேக், உணவு, வாட்டர் பாட்டில், பென்சில், புத்தகம் போன்ற எவற்றிற்கும் தேர்வு மையத்தில் அனுமதி கிடையாது.