வரவிருக்கும் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் (NEET-UG) எந்தவிதமான குறைபாடுகளும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, கல்வி அமைச்சகம் (MoE), அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் தொடர் கூட்டங்களை நடத்தி வருகிறது. தேசிய அளவிலான மருத்துவ நுழைவுத் தேர்வு மே 4 ஆம் தேதி நடைபெறும், மேலும் நாடு முழுவதும் 5,000 க்கும் மேற்பட்ட மையங்களில் 550 க்கும் மேற்பட்ட நகரங்களில் நடைபெறும்.
இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்
செய்தி நிறுவனமான பி.டி.ஐ அறிவித்தபடி, தேர்வின் நேர்மை குறித்து கவலைகளை எழுப்பிய வினாத்தாள் கசிவுகள் உட்பட கடந்த ஆண்டு நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சகம் ஒரு விரிவான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
“நீட் தேர்வை சீராகவும், நியாயமாகவும், பாதுகாப்பாகவும் நடத்துவதை உறுதி செய்வதற்காக, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன் தொடர் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. தளவாடங்கள், பாதுகாப்பு மற்றும் நெருக்கடி எதிர்வினைகளை நிர்வகிக்க மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக்கள் முழுமையாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன,” என்று ஒரு வட்டாரம் தெரிவித்தது.
"தேர்வு மையங்களில் தேசிய தேர்வு முகமையால் நியமிக்கப்பட்ட பாதுகாப்பு பணியாளர்டன் கூடுதலாக மாவட்ட காவல்துறையினரால் மேற்கொள்ளப்படும் பல அடுக்கு சோதனைகள் இருக்கும். வினாத்தாள்கள் மற்றும் ஓ.எம்.ஆர் (OMR) தாள்கள் போன்ற ரகசியப் பொருட்களின் போக்குவரத்து முழு போலீஸ் பாதுகாப்பின் கீழ் இருக்கும். ஒழுங்கமைக்கப்பட்ட மோசடி வலையமைப்புகளைத் தடுக்க பயிற்சி மையங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்கள் கண்காணிக்கப்படும்," என்று அந்த வட்டாரம் கூறியது.
அனைத்து தேர்வு மையங்களிலும் கட்டாய ஆய்வுக்காக மேற்பார்வையாளர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள், அதே நேரத்தில் தயார்நிலையை மதிப்பிடுவதற்காக தேர்வு மையங்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களின் தனிப்பட்ட வருகைகளும் இருக்கும்.
இளநிலை நீட் தேர்வு மற்றும் பி.எச்.டி (PhD) படிப்புக்கான நுழைவு தேர்வான நெட் தேர்வு (NET) ஆகியவற்றில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், தேசிய தேர்வு முகமையால் வெளிப்படையான, சீரான மற்றும் நியாயமான தேர்வுகளை நடத்துவதை உறுதி செய்வதற்காக மத்திய அரசு கடந்த ஆண்டு ஒரு குழுவை அமைத்தது.
வினாத்தாள் கசிவுகள் உட்பட பல முறைகேடுகள் தொடர்பாக நீட் தேர்வு கண்காணிப்பில் இருந்தபோது, UGC-NET (பல்கலைக்கழக மானிய ஆணையம் - தேசிய தகுதித் தேர்வு) தேர்வு அதன் நேர்மை சமரசம் செய்யப்பட்டதாக அமைச்சகத்திற்கு தகவல் கிடைத்ததால் ரத்து செய்யப்பட்டது.
இரண்டு விஷயங்களையும் மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) விசாரித்து வருகிறது. முன்கூட்டியே நடவடிக்கையாக மற்ற இரண்டு தேர்வுகள் - CSIR-UGC NET மற்றும் NEET-PG - கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டன.
கூடுதல் தகவல்கள் – பி.டி.ஐ