தேசிய தேர்வு முகமை (NTA) ஞாயிற்றுக்கிழமை (மே 4) 22.7 லட்சம் மருத்துவ தேர்வர்களுக்காக தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு இளநிலை (நீட் யு.ஜி - NEET UG) தேர்வை நடத்தியது. தேர்வெழுதிய மாணவர்கள் மற்றும் இந்தத் துறையின் நிபுணர்களின் கருத்துப்படி, நீட் யு.ஜி 2025 தேர்வின் கேள்விகள் முந்தைய ஆண்டுகளை விட குறிப்பிடத்தக்க வகையில் கடினமாக இருந்தன.
ஆங்கிலத்தில் படிக்க:
பல விண்ணப்பதாரர்கள் ஒட்டுமொத்தமாக தாள் அதிக நேரம் எடுப்பதாகவும், கருத்து ரீதியாக அதிக தேவை உள்ளதாகவும் கண்டறிந்தனர். கேள்விகள் கோவிட்-க்கு முந்தைய முறையைப் பின்பற்றி இருந்தன. மேலும், அதிக சிக்கலாக இருந்தது, குறிப்பாக இயற்பியல் மற்றும் வேதியியலில், அதிக மதிப்பெண் பெறுவதை மிகவும் கடினமாக்கியுள்ளது. ஆலன் கேரியர் இன்ஸ்டிடியூட் இயக்குனர் டாக்டர் பிரஜேஷ் மகேஷ்வரி கருத்துப்படி, இந்த ஆண்டு நீட் தேர்வு கடினமாக இருந்ததால் அதிக மதிப்பெண் பெறுபவர்களின் எண்ணிக்கையை பாதிக்கக்கூடும் என்று கூறினார்.
பாட வாரியாக கருத்து
இயற்பியல்
இயற்பியல் பிரிவு மற்ற மூன்று பிரிவுகளிலும் மிகவும் கடினமாக இருந்தது எனக் கூறப்பட்டது. கேள்விகளுக்கு வலுவான கருத்தியல் புரிதல் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை தேவைப்பட்டது. பல கேள்விகள் சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், பல படிகளை உள்ளடக்கியிருந்ததால் அதிக நேரம் எடுத்தன. சரியான பதில்களைப் பெற மாணவர்கள் பல அத்தியாயங்களில் உள்ள கருத்துகளைப் பயன்படுத்த வேண்டியிருந்தது, இது ஒட்டுமொத்த கடினத்தன்மையை அதிகரித்தது.
வேதியியல்
வேதியியல் பிரிவு நீளமாக இருந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக, ஒன்றுக்கு மேற்பட்ட சரியான பதில்களைக் கொண்ட கேள்விகள் சேர்க்கப்பட்டதால் மாணவர்கள் குழப்பமடைந்தனர். இந்த பிரிவு துல்லியம் மற்றும் கவனமாகப் படித்தல் ஆகியவற்றை வேண்டியிருந்தது. ஏனெனில், சிறிய தவறான புரிதல்கள்கூட பிழைகளுக்கு வழிவகுக்கும். கோட்பாட்டுப் பகுதிகள் ஒப்பீட்டளவில் எளிதாக இருந்தன, ஆனால், பயன்பாட்டு அடிப்படையிலான கேள்விகள் கணிசமான அளவில் கடினமாக இருந்தன.
உயிரியல்
உயிரியல் (தாவரவியல் மற்றும் விலங்கியல்) பாடம் கான்செப்ட் ரீதியாக அவ்வளவு கடினமாக இல்லாவிட்டாலும், இந்த பிரிவு மிகவும் நீளமாக இருந்தது. கேள்விகள் பெரும்பாலும் விரிவாகவும், கவனமாகப் படிக்க வேண்டியதாகவும் இருந்தன. இது பாடத்தில் நன்கு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்குகூட நேர நிர்வாகத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தியது. இந்த பிரிவின் நீளமான தன்மை கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் தேர்வை வசதியாக முடிக்க மாணவர்களுக்கு கடினமாக இருந்தது.