தேசிய தேர்வு முகமை மே 1 ஆம் தேதி நீட் தேர்வுக்கான (NEET UG 2025) ஹால் டிக்கெட்களை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீட் தேர்வுக்கு பதிவு செய்த மாணவர்கள், தங்கள் நுழைவுச் சீட்டுகளை neet.nta.nic.in என்ற இணையதளப் பக்கத்தில் சரிபார்த்து பதிவிறக்கம் செய்யலாம். மாணவர்கள் தங்கள் விண்ணப்ப எண், பிறந்த தேதி மற்றும் கேப்ட்சா குறியீடு போன்ற உள்நுழைவுச் சான்றுகளை பயன்படுத்தி டவுன்லோடு செய்ய வேண்டும்.
இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்
நீட் தேர்வு மே 4, 2025 அன்று ஆஃப்லைன் முறையில் நடைபெறும். இது எம்.பி.பி.எஸ் (MBBS), பி.டி.எஸ் (BDS), ஆயுர்வேதம் (BAMS), யுனானி (BUMS), ஹோமியோபதி (BHMS) மற்றும் சித்தா (BSMS) போன்ற இளங்கலை மருத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய படிப்புகளில் சேருவதற்கான ஒரே நுழைவுத் தேர்வாக செயல்படுகிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் குறைந்த எண்ணிக்கையிலான மருத்துவ இடங்களுக்கு போட்டியிட லட்சக்கணக்கான மாணவர்கள் தயாராகி வருகின்றனர்.
இந்த இளங்கலை மருத்துவத் தேர்வு மே 4 ஆம் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரே ஷிப்டில் நடைபெறும். தேசிய தேர்வு முகமை ஏற்கனவே தேர்வு நகரச் சீட்டுகளை வெளியிட்டுள்ளது.
நீட் தேர்வு எழுதும் மாணவர்கள், நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டதும் அதை கவனமாகப் படித்து, அஞ்சலட்டை அளவிலான புகைப்படம் மற்றும் ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பிற ஆவணங்கள் உள்ளிட்டவற்றை தேர்வு மையத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
நீட் தேர்வு தொடர்பான சந்தேகத்திற்கிடமான தளங்கள் மற்றும் உரிமைகோரல்களைப் புகாரளிக்க, தேசிய தேர்வு முகமை ஒரு பிரத்யேக தளத்தை உருவாக்கியுள்ளது, அங்கு பயனர்கள் அத்தகைய நிகழ்வுகளை ஏஜென்சிக்கு புகாரளிக்கலாம்.
"அறிக்கையிடல் படிவம் எளிமையானது மற்றும் பயனர்கள் தாங்கள் கவனித்ததை, எங்கு, எப்போது நிகழ்ந்தது என்பதை விவரிக்கவும், துணைக் கோப்பைப் பதிவேற்றவும் அனுமதிக்கிறது. இந்த முயற்சி பொதுத் தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகள் தடுப்பு) சட்டம், 2024 உடன் ஒத்துப்போகிறது, இது பொதுத் தேர்வுகளில் நியாயமற்ற நடைமுறைகளை அகற்றி, தேர்வர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது," என்று தேசிய தேர்வு முகமை இயக்குனர் தெரிவித்துள்ளார்.