மே 5 ஆம் தேதி நடைபெற்ற மருத்துவ நுழைவுத் தேர்வான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்துவதில் முறைகேடுகள் நடந்ததாக மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க:
தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்த விசாரணை சி.பி.ஐ இடம் ஒப்படைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்த ஒரு நாள் கழித்து இந்த நடவடிக்கை வந்துள்ளது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் குறிப்பின் பேரில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது சி.பி.ஐ புதிய வழக்கு பதிவு செய்ததாக அதிகாரிகள் கூறியதாக செய்தி நிறுவனமான பி.டி.ஐ தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு, இளங்கலைப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்காக நடத்தப்பட்ட மருத்துவ நுழைவுத் தேர்வில் 24 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வெழுதினர்.
முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துமாறு பல நகரங்களில் போராட்டம் நடத்திய மாணவர்களின் கோரிக்கைகளுக்கு அமைச்சகம் செவிசாய்த்ததாக அதிகாரிகள் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.
“மே 5 ஆம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வில் சில முறைகேடுகள், ஏமாற்றுதல், ஆள்மாறாட்டம் மற்றும் முறைகேடு போன்ற வழக்குகள் பதிவாகியுள்ளன” என்று கல்வி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
"தேர்வு செயல்முறையின் வெளிப்படைத்தன்மைக்காக, ஒரு விரிவான விசாரணைக்காக இந்த விஷயத்தை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க மறுபரிசீலனைக்குப் பிறகு முடிவு செய்யப்பட்டது" என்று அந்த அதிகாரி கூறினார்.
இதற்கிடையில், சனிக்கிழமையன்று மத்திய அரசிற்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், பீகார் அரசாங்கத்தின் பொருளாதார குற்றப்பிரிவு (EOU) நீட் தேர்வில் "வினாத்தாள் கசிவு நடந்துள்ளது தெளிவாக தெரிகிறது" என்று கூறியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது
மே 5 ஆம் தேதி தேர்வு முடிந்தவுடன், நான்கு தேர்வர்கள் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து விசாரணையை எடுத்துக் கொண்ட பீகார் காவல்துறையிடம் மத்திய அரசு ஒரு அறிக்கையைக் கோரியது. பீகார் காவல்துறை குழுவுக்கு கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெனரல் என்.ஹெச்.கான் தலைமை தாங்குகிறார்.
"கல்வித் துறைக்கான எங்கள் அறிக்கை மூன்று விஷயங்களைப் பற்றி விரிவாகக் குறிப்பிடுகிறது, இதுவரை ஆதாரங்களின் அடிப்படையில் வினாத்தாள் கசிவு பற்றிய தெளிவான பரிந்துரை, மாநிலங்களுக்கு இடையேயான கும்பலின் தொடர்பு மற்றும் பீகாரின் மோசமான 'விடைகளைக் கண்டறியும் கும்பலின்' பங்கு சந்தேகத்திற்குரியது" என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. .
நீட் தேர்வு எழுதுபவர்களின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்று மத்திய கல்வி அமைச்சர் கூறினார். மாணவர்களின் அனைத்து கவலைகளும் நியாயமான மற்றும் சமத்துவத்துடன் தீர்க்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார். மறுபுறம், இந்த விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் மவுனம் குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது மற்றும் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பு தடயவியல் ஆய்வு மட்டுமே லட்சக்கணக்கான இளம் மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் என்று வலியுறுத்தியுள்ளது. கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் தேசிய தேர்வு முகமை மூலம் மோடி அரசு “நீட் ஊழலை மூடிமறைக்க” தொடங்கியுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறினார்.
நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் ஞாயிற்றுக்கிழமை திட்டமிடப்பட்ட முதுநிலை நீட் தேர்வை மத்திய சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை இரவு ஒத்திவைத்தது.
"இந்த முடிவு மாணவர்களின் நலன்களுக்காகவும், தேர்வு செயல்முறையின் புனிதத்தன்மையை பராமரிக்கவும் எடுக்கப்பட்டுள்ளது... புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்" என்று அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதார செயலாளர் அபூர்வ சந்திரா இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறியதாவது: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதுநிலை நீட் ஒத்திவைக்கப்படுகிறது.
தற்போது நீட் தேர்வு சர்ச்சையில் சிக்கியுள்ள தேசிய தேர்வு முகமை இந்த தேர்வை நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சி.எஸ்.ஐ.ஆர் யூ.ஜி.சி நெட் தேர்வு (CSIR UGC NET) ஒத்திவைக்கப்பட்ட ஒரு நாள் கழித்து வினாத் தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட வேண்டியதாகிற்று. இந்த நெட் தேர்வையும் தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.
கூடுதல் தகவல்கள்: பி.டி.ஐ
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“