கேந்திரிய வித்யாலயா, ஜவஹர் நவோதயா வித்யாலயா உள்ளிட்ட பள்ளிகளில் 5 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆல் பாஸ் முறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Government ends no-detention policy in KVs and JNVs, 5 years after diluting RTE Act
இந்த முடிவு பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சைனிக் பள்ளிகள் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஏக்லவ்யா மாதிரி பள்ளிகளை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.
கல்வி உரிமை சட்டம் 2009, கடந்த 2019-ஆம் ஆண்டு திருத்தப்பட்ட நிலையில், 5 ஆண்டுகளுக்குள் ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் என்ற முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. 18 மாநிலங்கள் மற்றும் யூனிய பிரதேசங்களில் இந்த முறை ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் கல்வி அமைச்சகம் சார்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதன் படி, 5 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் முறை ரத்து செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்படி, 5 மற்றும் 8-ஆம் வகுப்பு ஆண்டு இறுதித் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறாவிட்டால், அவர்கள் அடுத்த வகுப்புக்கு முன்னேறி செல்வது நிறுத்தப்படும். இதில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு 2 மாதங்களில் மறுதேர்வு நடத்தப்படும். அத்தேர்விலும் மாணவர்கள் தேர்ச்சி பெறாவிட்டால் அவர்கள் அதே வகுப்பிலேயே பயில வேண்டிய நிலை உருவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு தேர்ச்சி பெறாத மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு ஆசிரியர்கள் வழிகாட்டி, கற்றலில் இருக்கும் இடைவேளியை சீர் செய்வார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, தேர்ச்சி பெறாத மாணவர்களின் பட்டியலை பள்ளியின் தலைமை ஆசிரியர் தயார் செய்து, அந்த மாணவர்களுக்கு தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கல்வி உரிமைச் சட்டம் 2009, பிரிவு 16ன் கீழ், பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களை தேர்ச்சி அடையச் செய்யாமல் இருப்பது தடை செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்ச்சி பெறாத சூழல் உருவானால், அது பள்ளிகளில் இருந்து அவர்கள் இடைநிறுத்தப்படுவதற்கான வாய்ப்பை வழங்குவதாக கூறப்படுகிறது. இது மாணவர்கள் குறைந்தபட்ச கல்வியை பெறுவதை உறுதி செய்யும் வகையில் இருந்தது.
அதன் பின்னர் பல ஆண்டுகளாக, இந்த நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என மாநிலங்கள் கோரிக்கை விடுத்து வந்தன. இதைத் தொடர்ந்து, மாணவர்கள் தங்கள் கல்வியில் தீவிரம் காட்டவில்லை என்றால், இதனை ரத்து செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்காக, கடந்த 2019-ஆம் ஆண்டில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என பல மாநில அரசுகள் கோரிக்கை விடுத்ததாகவும், தொடக்க கல்வியின் மீது நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்காகவும் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக அப்போதைய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
சட்டத்திருத்தத்திற்குப் பிறகு, அசாம், பீகார், குஜராத், ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு மற்றும் காஷ்மீர், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், மேகாலயா, நாகாலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், தமிழ்நாடு, திரிபுரா, உத்தரகண்ட், மேற்கு வங்காளம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இந்தக் கொள்கையை நீக்கியுள்ளன.
ஹரியானா மற்றும் புதுச்சேரி இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என அமைச்சகம் கூறியுள்ளது.
ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், கோவா, சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மணிப்பூர், மிசோரம், ஒடிசா, தெலங்கானா, உத்தர பிரதேசம், லடாக், லட்சத்தீவு, சண்டிகர் மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆகியவை இதே கொள்கையில் தொடரப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Abhinaya Harigovind
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.