/indian-express-tamil/media/media_files/2025/09/09/studnents-tablet-2025-09-09-22-10-21.jpg)
ஆந்திரப் பிரதேசத்தின் 1,224 அரசுப் பள்ளிகளில் டேப்லெட்களில் பயன்பாட்டில் உள்ள பி.ஏ.எல் மென்பொருள், அதைப் பயன்படுத்தும் மாணவரின் கற்றல் அளவைப் பொறுத்து கற்றல் பொருள் மற்றும் மதிப்பீடுகளை வடிவமைக்கிறது. Photograph: (Image created with Meta AI)
ஆந்திரப் பிரதேசத்தில் மேற்கொண்ட ஆய்வுகள், தனிப்பட்ட முறையில் தழுவி கற்றல் (Personalised Adaptive Learning – பி.ஏ.எல்) மென்பொருள் பயன்படுத்துவதால் மாணவர்களின் கற்றல் விகிதம் இரட்டிப்பானது என தெரியவந்துள்ளது.
மாணவர் எந்த நிலையில் இருக்கிறாரோ, அதற்கேற்றவாறு பாடத்திட்டம் மற்றும் மதிப்பீடுகளைத் தரும் பி.ஏ.எல் மென்பொருள் தற்போது ஆந்திரப் பிரதேசத்தின் 1,224 அரசு பள்ளிகளில் டேப்லெட் வழியாக பயன்படுத்தப்படுகிறது.
நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் மைக்கேல் கிரெமர், இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் பள்ளிகளில் பி.ஏ.எல்-ஐ பரிசீலிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து கிடைத்த ஆதாரங்கள் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தியதை அவர் சுட்டிக்காட்டினார்.
சிகாகோ பல்கலைக்கழகத்தின் மேம்பாட்டு புத்தாக்கம் ஆய்வகம் (Development Innovation Lab) வெளியிட்ட ஆய்வின் பின்னணியில் அவர் கருத்து தெரிவித்தார். அந்த ஆய்வில், பி.ஏ.எல் முறையால் மாணவர்களின் கற்றல் விகிதம் இரட்டிப்பானது; குறிப்பாக வகுப்பில் பின்தங்கிய மாணவர்கள் அதிக பலன் அடைந்தனர்.
“நான் இந்தியாவில் கொள்கை உருவாக்குபவராக இருந்தால், இந்த முறையை (பி.ஏ.எல்) முன்னெடுப்பேன்” என கிரெமர் இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில் கூறினார். இந்த திட்டத்தின் வெற்றிக்கான அடிப்படை ஆசிரியர்களின் பங்குபற்றுதலிலும், மாணவர்கள் உண்மையில் ஈடுபடுகிறார்களா என்பதைக் கண்காணிப்பதிலும் உள்ளது என அவர் வலியுறுத்தினார்.
“கல்வியில் ஒரு பொதுவான கண்டுபிடிப்பு என்னவென்றால், மாணவர் எங்கு இருக்கிறாரோ அங்கேயே அவரைச் சந்திப்பதே சிறந்தது. பி.ஏ.எல்-ன் சிறப்பம்சம் என்னவென்றால் அது தானாகவே மாணவரின் நிலைக்கு ஏற்ப பாடத்தை மாற்றிக் கொடுக்கும். உதாரணமாக, கழித்தல் கணக்கு தெரியாத மாணவருக்கு வகுத்தல் கணக்கு கற்றுக் கொடுக்க முடியாது. எனவே, மென்பொருள் கழித்தல் கணக்கில் உதவுகிறது. அதே சமயம், பெருக்கல் கணக்கு கற்றுக் கொண்டிருக்கும் வகுப்பில் வகுத்தல் கற்றுக்கொள்ளத் தயாராக உள்ள மாணவருக்கு சவாலான பிரச்னைகளைத் தருகிறது” என்று கிரெமர் விளக்கினார்.
இந்த ஆய்வு 6 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களை உள்ளடக்கியது. பி.ஏ.எல் அதிகம் பயன்படுத்திய மாணவர்களே அதிகமாக கற்றுக் கொண்டனர். சிறிய பள்ளிகளில் (அங்கு மாணவர்கள் குறைவாக இருப்பதால்) ஒவ்வொரு மாணவரும் டேப்லெட்டைப் பயன்படுத்த வாய்ப்பு கிடைத்ததால், அவர்கள் அதிக நன்மை பெற்றனர்.
“சிறிய பள்ளிகளில் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு டேப்லெட் கிடைத்தது. பெரிய பள்ளிகளில் மாணவர்கள் மாறிமாறி பயன்படுத்த வேண்டியிருந்தது. அதிக பயன்பாடு அதிக கற்றலுக்கே வழிவகுத்தது. எனவே மாநிலம் கூடுதல் உபகரணங்களை வழங்கும் வாய்ப்பு இருந்தால் அது கற்றலை மேலும் மேம்படுத்தும்” என்று அவர் கூறினார்.
பி.ஏ.எல் வெற்றிக்கு தொழில்நுட்பம் மட்டுமல்ல, ஆசிரியர்களின் பங்கும் முக்கியம் என கிரெமர் வலியுறுத்தினார். “ஆசிரியர் பங்கேற்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மாணவர் ஈடுபடவில்லை எனக் கண்காணித்து ஆசிரியருக்கு எச்சரிக்கை அனுப்பும் வசதி கூட மென்பொருளில் உருவாக்கப்படலாம்” என்றார்.
ராஜஸ்தானில் நடைபெற்ற மற்றொரு ஆய்வில், அனைத்து நிலை மாணவர்களுக்கும் சமமான பலன் கிடைத்தது. “இப்போது மூன்று தனித்தனி ஆய்வுகளும் பி.ஏ.எல் மாணவர்களுக்கு நல்ல பலன் அளித்துள்ளது. எனவே மாநில அரசுகள் தங்களது சூழ்நிலையைப் பார்த்து, இதை பரிசீலிக்க வேண்டும்” என்று கிரெமர் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.