NTA extends time duration for NEET UG exam 2022: இளங்கலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வில், விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு எழுதுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) ஒவ்வொரு ஆண்டும் தேசிய தேர்வு முகமையால் (NTA) நடத்தப்படுகிறது. இந்த தேர்வு இளங்கலை (NEET UG) மற்றும் முதுகலை (NEET PG) மருத்துவ படிப்பு சேர்க்கைகளுக்கு தனித்தனியாக நடத்தப்படுகிறது. இதில் இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான NEET தேர்வில் லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
ஆனால் இந்த நீட் தேர்வு மிகவும் கடினமானது. எல்லா விண்ணப்பதாரர்களாலும் முதல் முயற்சியிலே தகுதி பெற முடியாது. இந்தநிலையில், இந்த ஆண்டு இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வில் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று முதல் முறையாக தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இளங்கலை மருத்துவ சேர்க்கைக்கான நீட் 2022 தேர்வில் பங்கேற்கும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் 20 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும். அதாவது, இந்த ஆண்டு அனைத்து மாணவர்களுக்கும் 3 மணி நேரம் 20 நிமிடங்கள் முழுத் தாளுக்கும் கால அவகாசம் வழங்கப்படும். கடந்த ஆண்டு நீட் தேர்வில் 200 கேள்விகள் இடம் பெற்றிருந்தன. இதில் 180 கேள்விகளுக்கு மாணவர்கள் பதிலளிக்க வேண்டும்.
தேர்வில் அதிக எண்ணிக்கையிலான கேள்விகள் கேட்கப்படும் நிலையில், போதிய கால அவகாசம் இல்லாததால், விருப்பமான கேள்விகளை தேர்ந்தெடுக்க அனைத்து கேள்விகளையும் படிக்க நேரமில்லாத காரணத்தை விளக்கி, மாணவர்கள் தேசிய தேர்வு முகமைக்கு கடிதம் எழுதி, அனைத்து வினாக்களையும் படிக்க கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும், அப்போது தான் தங்களால், தங்களுக்கு தெரிந்து வினாக்களை தேர்வு செய்து விடையளிப்பதன் மூலம் தேர்வில் சிறப்பாக செயல்பட முடியும் என்று குறிப்பிட்டிருந்தனர்.
இதையும் படியுங்கள்: தேனி மாவட்ட வருவாய்த்துறை வேலைவாய்ப்பு; 5-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
இதனையேற்று, தேசிய தேர்வு முகமை, நீட் தேர்வுக்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. இதனையடுத்து தேர்வின் காலக்கெடுவை அதிகப்படுத்தி இருப்பதால், மாணவர்கள் மிகுந்த நிம்மதியைப் பெறுவதோடு, அனைத்து கேள்விகளையும் நன்கு புரிந்துகொண்டு பதில் எழுத முடியும் என்று கூறப்படுகிறது.
இதனிடையே, இந்த ஆண்டு இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு ஜூலை 17, 2022 அன்று நடைபெறும். இந்தத் தேர்வில் தகுதிபெறும் மாணவர்கள், நாட்டின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் இளங்கலை மருத்துவப் படிப்புகளை (MBBS) படிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil