தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் வழங்கப்படும் பி.எஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் இந்த படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறுவதால், மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.
தமிழகத்தில், பி.எஸ்சி நர்சிங், பி.பார்ம், பி.பி.டி, பி.ஏ.எஸ்.எல்.பி (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி, நோய்க்குறியியல்) உட்பட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,500க்கும் மேற்பட்ட இடங்களும், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களும் உள்ளன. இந்த படிப்புகளுக்கு பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
2025-26 ஆம் கல்வியாண்டுக்கான துணை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை ஜூன் 17 ஆம் தேதி (நேற்று) நண்பகல் 12.01 மணிக்குத் தொடங்கியது. மாணவர்கள் www.tnmedicalselection.org என்ற சுகாதாரத்துறை இணையதளம் வாயிலாக ஜூலை 7 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். படிப்புகளுக்கான கட்டணம், தகவல் தொகுப்பேடு, விண்ணப்பத்தைப் பதிவேற்றம் செய்வது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இந்த இணையதளத்தில் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
அதேபோல், டிப்ளமோ நர்சிங் (பெண்கள்) மற்றும் பார்ம்.டி படிப்புகளுக்கும் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளதாக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ள நிலையில், அந்தப் படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு முடிந்த பிறகு, துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.