scorecardresearch

புதுவையில் பிளஸ் டூ தேர்ச்சி விகிதம் குறைந்தது ஏன்? முதல்வர் ரங்கசாமி விளக்கம்

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைந்ததற்கு கடந்த ஆண்டு பாடத்திட்டம் குறைவாக இருந்ததும், இந்த ஆண்டு முழுமையான பாடத்திட்டம் இருந்ததும்தான் காரணம் – புதுச்சேரி முதல்வர்

Puducherry
Puducherry Board 12th Result 2023 Tamil News

சட்டசபையில் அறிவித்த அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும் என்றும், முழுமையான பாடத்திட்டமே தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு காரணம் என்றும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.

புதுவை முதலமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைந்ததற்கு கடந்த ஆண்டு பாடத்திட்டம் குறைவாக இருந்ததும், இந்த ஆண்டு முழுமையான பாடத்திட்டம் இருந்ததும்தான் காரணம். அரசு பள்ளிகளின் தரத்தை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம். அரசு பள்ளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து வருகிறோம்.

இதையும் படியுங்கள்: புதுச்சேரி: பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியீடு; 92.67 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

தற்போது அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இல்லை. ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பியுள்ளோம். அந்த ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வும் அளித்துள்ளோம். கூடுதலாக மீண்டும் சம்பள உயர்வு வழங்க உள்ளோம். நிரந்தரமான ஆசிரியர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற பயிற்சி அளிக்கிறோம். சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை படிப்படியாக கொண்டு வந்துள்ளோம். இந்த ஆண்டு ஒன்று முதல் 9 ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் அரசு பள்ளிகளில் அமல்படுத்தப்படும். 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகள் மாநில கல்வி அடிப்படையில் நடைபெறும்.

அடுத்த கல்வியாண்டில் இவற்றையும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டமாக மாற்றப்படும். தமிழ் விருப்ப பாடமாக இருக்கும். மாணவர்கள் விரும்பினால் பிரெஞ்சும் படிக்கலாம். கல்வியாண்டு தொடக்கத்திலேயே லேப்டாப் வழங்க உள்ளோம். சீருடை தற்போது வழங்கப்பட்டு வருகிறது. சென்டாக் கலந்தாய்வு உரிய நேரத்தில் தொடங்கப்படும்.

கடந்த ஆண்டுபோல கலைக்கல்லூரிகள் தொடங்க காலதாமதம் ஆவதை தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் செயல்பாடுகள் கடந்த 2 ஆண்டுகளாக சிறப்பாக உள்ளது. இது மக்களுக்கு நன்றாக தெரியும். பட்ஜெட்டில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும்.

ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட திட்டங்களையும், நிறுத்தப்பட்ட திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை எடுப்போம். பொதுப்பணித்துறை மூலம் 135 கிமீ சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. உள்ளாட்சித்துறை மூலம் சாலைகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். 100 நாள் வேலை திட்டத்தில் கூடுதல் வேலைநாட்கள் வழங்க உள்ளோம். மக்கள் நலத்திட்டங்கள் குறித்த நேரத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

முதியோர் உதவித்தொகை உயர்த்தியுள்ளோம். கிடைக்குமோ? கிடைக்காதோ? என்ற நிலையில் இருந்த அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை புதிதாக வழங்கியுள்ளோம். விண்ணப்பித்த அனைவருக்கும் உதவித்தொகை உடனடியாக வழங்க உள்ளோம்.

மத்திய அரசு புதுவைக்கு நிச்சயம் மாநில அந்தஸ்து வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தோடு பிரதமர், உள்துறை அமைச்சரை விரைவில் சந்திக்க உள்ளோம். பிரதமரிடம் நேரம் ஒதுக்கித்தர கோரியுள்ளோம். அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பது அ.தி.மு.க.,வின் கருத்து. இவ்வாறு அவர் கூறினார்.

பாபு ராஜேந்திரன், புதுச்சேரி

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Puducherry cm rangasamy says syllabus imbalance is the reason for 12th pass percentage low