அக்னிபாத் திட்டத்துக்கு விண்ணப்பம் செய்வோருக்கான சிறப்பு முகாம் ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெறும் எனவும், இதற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 25 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது;
அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் பொதுப்பணி, தொழில் நுட்பப்பணி, எழுத்தர், பண்டக காப்பாளர், டிரேட்ஸ்மேன் உள்ளிட்ட பிரிவுகளில் சேர சுமார் 25 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிப்பதற்கு ஏப்ரல் 10 ஆம் தேதி கடைசி தேதி என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இளைஞர்களின் நலன் கருதி விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது விண்ணப்பிக்க இம்மாதம் வருகிற 25 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வரை கடைசி நாளாகும். அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர் ஆட்தேர்வுக்கு புதுச்சேரி பகுதியை சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள் விண்ணப்பிக்கலாம். 22.04.2025 அன்று தாகூர் கலைக் கல்லூரியில் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
புதுச்சேரி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து தகுதியான இளைஞர்களும் அக்னி வீர் திட்டத்தில் இணையும் வகையில் இணையதளத்தில் பதிவு செய்வது மற்றும் அக்னிபாத் திட்ட விழிப்புணர்வு முகாம் 22.04.2025 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு தாகூர் கலைக் கல்லூரியில் நடைபெற உள்ளன. மேலும் வரும் 25 ஆம் தேதி வரை அந்தந்த பள்ளி கல்லூரிகளிலும் விண்ணப்பிக்கும் முகாம் நடைபெற உள்ளன. புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த நபர்கள் அக்னிவீர் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க தேவையான ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட செயலில் உள்ள கைபேசி எண், மின் அஞ்சல் முகவரி, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், விளையாட்டு மற்றும் என்.சி.சி. சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும். மேலும், கூடுதல் விவரங்கள் (www.joinindianarmy.nic.in) என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.