புதுச்சேரி பள்ளிகளில் மாணவர்களை போதுமான அளவு தண்ணீர் உட்கொள்ள ஊக்குவிக்கும் வகையில், பள்ளிகளில் "வாட்டர் பெல்" அறிமுகப்படுத்த வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.
புதுச்சேரியில் கோடை விடுமுறைக்கு பின்பு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதையொட்டி வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவ, மாணவிகள் தண்ணீர் குடிப்பதின் அவசியத்தை உணர்த்த, அனைத்து பள்ளிகளிலும் வாட்டர் பெல் அடிக்க வேண்டும் என அதிரடியான உத்தரவைப் பள்ளிக் கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளது.
இதையும் படியுங்கள்: மருத்துவப் படிப்புகளைத் தொடங்க தனியார் மருத்துவ மனைகளுக்கு மத்திய அரசு அழைப்பு; நிபுணர்கள் இருவேறு கருத்து
பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் பள்ளிகளுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, கோடை விடுமுறைக்கு பின்பு நாளை தனியார் மற்றும் அரசு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. தற்போது வெப்பநிலை தொடர்ந்து மிக அதிகமாக காணப்படுவதால் மாணவ, மாணவிகளிடம் தண்ணீர் குடிப்பதின் அவசியத்தையும் மற்றும் சுற்றுப்புற சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வையும் சொல்லித் தர வேண்டும். மேலும் தண்ணீர் குடிப்பதன் அவசியத்தை எடுத்துக் கூறி, தங்களது உடலை நீரூற்றமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை மாணவர்களிடம் எடுத்துரைக்க வேண்டும்.
பள்ளி நடைபெறும் போது காலை 10:30 மணிக்கு ஒருமுறை மணி அடிப்பதன் மூலம் மாணவர் மத்தியில் தண்ணீர் குடிப்பதின் அவசியத்தை நினைவுபடுத்த வேண்டும். அதேபோன்று 11.45 மணிக்கு ஒரு மணி அடித்து தண்ணீர் குடிப்பதன் அவசியத்தை மாணவர்களிடம் தெரியப்படுத்த வேண்டும். இதேபோல் பிற்பகல் 2.30 மணிக்கு தண்ணீர் பெல் அடிக்க வேண்டும்.
தினந்தோறும் இதை கடைப்பிடித்தால் பள்ளிகளில் இரண்டு முறை மணி அடிப்பதால் நாம் தண்ணீர் குடிக்க வேண்டும் என மாணவர்கள் மத்தியில் ஒரு நினைவூட்டலை ஏற்படுத்தும். இதை மாணவர் மத்தியில் கட்டாயப்படுத்த கூடாது. மேலும் கழிப்பறை மற்றும் மாணவ மாணவிகள் பயன்படுத்தும் இடங்களை சுத்தமாக வைத்துக் கொள்வதன் அவசியத்தையும் உணர்த்த வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil