scorecardresearch

10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் வீழ்ச்சி; பெற்றோர்கள் அதிர்ச்சி

புதுச்சேரியில் பள்ளி பொதுத் தேர்வுகளில் குறைந்து வரும் தேர்ச்சி சதவீதம்; அரசு பள்ளிகளில் இன்னும் குறைந்த தேர்ச்சி விழுக்காடு

10th Public Exam, Tiruchirappalli students presents and absents details, 10-ம் வகுப்பு தமிழ் தேர்வு, திருச்சியில் இவ்வளவு பேர் ஆப்சன்ட், Tiruchirappali 10th Public Exam, Tiruchirappalli students presents and absents details
10-ம் வகுப்பு தேர்வு

புதுச்சேரி மாநிலத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வெளியானது. இதில், புதுவை, காரைக்காலில் 3.46 சதவீதம் தேர்ச்சி சதவீதம் குறைந்தது. அதிலும் அரசு பள்ளியில் மாணவர் தேர்ச்சி விகிதம் 6.58 சதவீதம் குறைந்தது. மாணவர் தேர்ச்சி சதவீதம் குறைந்தது பெற்றோர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்றைய தினம் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. புதுவை, காரைக்காலில் 3.8 சதவீதம் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. அரசு பள்ளிகளில் 6.09 சதவீதம் மாணவர் தேர்ச்சி குறைந்துள்ளது. இதைத்தொடர்ந்து பிளஸ் 1 மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதிலும் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 3.72 சதவீதம் குறைந்துள்து. ஒட்டுமொத்தமாக பொதுத்தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இது புதுவை பெற்றோர்களிடம் கவலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்: எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு; புதுவை, காரைக்காலில்  குறைந்த தேர்ச்சி விகிதம், கல்வி அமைச்சர் சொல்வது என்ன?

அரசு தரப்பில் கொரோனா பரவலை தடுக்க 2 ஆண்டு பள்ளிகளுக்கு விடுமுறை, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி போன்றவற்றை சுட்டிக்காட்டுகின்றனர். கொரோனா முடிவுக்கு வந்து பள்ளிகள் திறக்கப்பட்டு ஓராண்டாகிவிட்டது. இன்னும் கொரோனா காரணத்தை சுட்டிக்காட்டி நிலைமை சீராகவில்லை என சொல்கின்றனர். அதேநேரத்தில் தனியார் பள்ளிகளின் தேர்ச்சியில் சரிவு இல்லை.

இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் ஒன்று முதல் 9 ஆம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை அரசு அமல்படுத்த உள்ளது. அதன்பிறகு வரும் கல்யாண்டில் பத்தாம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ்2 தேர்வை சி.பி.எஸ்.இ முறையில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இது சமச்சீர்கல்வியை விட இருமடங்கு கடினமாக இருக்கும். சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்துக்கு பள்ளி ஆசிரியர்களே தயாராகாத நிலை உள்ளது.

நீட் தேர்வுகளில் அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்று எம்.பி.பி.எஸ் சேர்பவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில்தான் உள்ளது. அகில இந்திய நுழைவுத்தேர்வுகளிலும் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவாகவே உள்ளது. சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை படிக்கும்போது அகில இந்திய நுழைவுத்தேர்வில் எளிதில் மாணவர்கள் வெற்றி பெறுவார்கள் என அரசு கருதுகிறது. இந்நிலையில் பொதுத்தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது பெற்றோர்களிடையே கவலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பாபு ராஜேந்திரன், புதுச்சேரி

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Puducherry schools public exams pass percentage decline

Best of Express