/indian-express-tamil/media/media_files/2025/09/11/shiva-sathya-puducherry-university-2025-09-11-13-03-31.jpeg)
புதுவைப் பல்கலைக்கழக பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் புல முதன்மையரும் கணினி அறிவியல் துறை பேராசிரியருமான டாக்டர் எஸ். சிவ சத்யா தேசிய ஆசிரியர் விருது 2025 பெற்றதற்காக பல்கலைக்கழக நிர்வாகம் மிகுந்த பெருமை கொள்வதாக வாழ்த்து தெரிவித்துள்ளது.
உயர் கல்வியில் 25 ஆண்டுகளுக்கும் அதிகமாக புதிய பாடங்களை அறிமுகப்படுத்துதல், பாடத்திட்ட வடிவமைப்பு, மாணவர் வழிகாட்டுதல் மற்றும் பல்வேறு கல்விக் குழுக்களில் பங்கு வகித்தல் ஆகிய துறைகளில் பேராசிரியை சிவ சத்யா செலுத்திய மறக்க முடியாத பங்களிப்புக்கான அங்கீகாரமாக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பேராசிரியை சிவ சத்யா தேசிய கல்விக் கொள்கை (NEP) செயல்படுத்தும் குழுவின் உறுப்பினராகவும், ஏ.ஐ.சி.டி.இ (AICTE) நோடல் அதிகாரியாகவும், அனைத்து பி.டெக் (B.Tech) பாடங்களின் முதலாம் ஆண்டு ஒருங்கிணைப்பாளராகவும், பல்கலைக்கழகம் மற்றும் இணைவுக் கல்லூரிகளின் மாணவர்களுக்கான குறைதீர்ப்பாளராகவும் செயற்பட்டு வருகிறார்.
புதுவைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பி. பிரகாஷ் பாபு, பேராசிரியை சிவ சத்யாவின் சாதனைகளை மனமார்ந்த பாராட்டுக்களுடன் குறிப்பிடுகையில், அவரது கல்வி, ஆராய்ச்சி மற்றும் மாணவர் நலனில் கொண்டுள்ள விரிவான பங்களிப்பு, புதுவைப் பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் ஆராய்ச்சி வளர்ச்சிக்கு ஒரு சிறந்த ஊக்கமாக உள்ளதாகவும், மாணவர்களுக்கு அவர் வழங்கும் தனிப்பட்ட வழிகாட்டல் மற்றும் தொழில்வாய்ப்பு ஆதரவு, பல்கலைக்கழகத்தின் மாணவர் மையக் கல்வி அணுகுமுறையின் உண்மையான பிரதிபலிப்பாகக் காணப்படுகிறது என்றும் வலியுறுத்தினார்.
அதே சமயம், இந்தியக் குடியரசுத் தலைவரும், பிரதமரும் தேசிய மட்டத்தில் அவரை பாராட்டியமை, புதுவைப் பல்கலைக்கழகத்துக்கு பெருமை சேர்த்ததாகவும் துணைவேந்தர் குறிப்பிட்டார்.
பேராசிரியர் சிவ சத்யா பயோ-இன்ஸ்பைர்டு கம்ப்யூட்டிங், ஸ்பேஷியோ-டெம்போரல் மைனிங் ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர். தற்போது சுகாதாரத் துறைக்கான செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகளில் ஆராய்ச்சி செய்து வருகிறார். தனது மாணவர்களுடன் இணைந்து ஜிப்மர் இதயவியல் துறைக்காக பல செயலிகளை உருவாக்கியதுடன், கல்வி அமைச்சகத்தின் “செயற்கை நுண்ணறிவுக்கான சிறப்பு மையம் (AI Centre of Excellence – Phase 1)” திட்டத்தில் “கார்டியாக் இந்தியா (CARDIAC-India)” கூட்டமைப்புக்கான புதுவைப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பத் தலைவராகவும் பணியாற்றுகிறார். மேலும், மலேசியாவின் ஐ.என்.டி.ஐ பன்னாட்டு பல்கலைக்கழகத்தில் (INTI International University) ஆராய்ச்சி உறுப்பினராகவும் உள்ளார்.
சமூக நலனுக்கான தொழில்நுட்பப் பங்களிப்புகளில், பெண்கள் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட மித்ரா (MITRA) செயலி சிறப்பிடம் பெறுகிறது. இதற்காக அவர் முன்பு “நாரி சக்தி புரஸ்கார்” விருதையும் பெற்றுள்ளார். தொழில்நுட்பம் மற்றும் கல்வியில் தனது பங்களிப்புகளுடன், கலை மற்றும் யோகாவின் வழியாக படைப்பாற்றல் மற்றும் நல்வாழ்வை மாணவர்களிடம் ஊக்குவிக்கிறார்.
புதுச்சேரி, பாபு ராஜேந்திரன்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.