புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பி.டெக் லேட்டரல் என்ட்ரி, முதுநிலை பொறியியல் படிப்புகள் மற்றும் பி.எச்டி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.
புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் 2025-26ஆண்டிற்கான இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கைகள் துவங்கியுள்ளன என சென்டாக் பேராசிரியர் ௧. செல்வராஜூ மாணவர்கள் சேர்க்கைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார் .
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,நான்காண்டு பொறியியல் இளநிலை படிப்பிற்கான விண்ணப்பங்கள் செண்டாக் மூலம் பெறப்பட்டு தரவரிசைப்பட்டியல் வெளியீட்டிற்காக பணிகள் நடைபெற்று வருகின்றன. டிப்ளமோ படித்து இரண்டாம் ஆண்டு பி.டெக் படிப்புகளில் நேரடியாக சேர்வதற்கு தகுதியுள்ள மாணவர்களிடம் இருந்து செண்டாக் மூலம் ஜூன் 26ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஒவ்வொரு துறையிலும் தலா 6 காலியிடங்கள் வீதம் மொத்தம் 53 காலியிடங்கள் உள்ளன. முதுநிலை ஈராண்டு படிப்புகளான எம்.டெக்., எம்.எஸ்சி, மற்றும் எம்.சி.ஏ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 1ந் தேதி முதல் 15ந்தேதி வரை பெறப்பட்டு பல்கலையில் உள்ள 297 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேலும், முழு மற்றும் பகுதி நேர பி.எச்.டி ஆராய்ச்சி படிப்பிற்கான விண்ணப்பங்கள் பல்கலைக்கழகத்தின் ptuniv.edu.in என்ற இணைய தளத்தின் மூலம் ஜூலை 4ம் தேதி வரை பெறப்பட்டு பரிசீலிக்கப்பட உள்ளன.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு ஜூலை 19ந் தேதி நுழைவுத் தேர்வு நடத்தி அதில் தகுதி பெறும் மாணவ/மாணவியருக்கு ஆகஸ்ட் 8 மற்றும் 9ந் தேதிகளில் நேர்முகத் தேர்வு நடைபெற்று தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். மேலும், ECE மற்றும் CSE துறைகளின் தர வரிசையில் முன்னிலை வகிக்கும் சில மாணவர்களுக்கு மத்திய அரசின் விஸ்வேஸ்வரய்யா ஆராய்ச்சி நிதியின் மூலம் மாதந்தோறும் ரூ. 38,750 நிதியுதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பாபு ராஜேந்திரன் புதுச்சேரி