ரயில்வே பணியாளர்கள் தேர்வாணையம் (RRB) தொழில்நுட்பம் அல்லாத பணிப் பிரிவுகளுக்கு கணினி அடிப்படையிலான முதல் நிலைத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடும் தேதி மற்றும் 2ம் நிலை தேர்வுகளுக்கான தேதியை அறிவித்துள்ளது.
ரயில்வே பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “பிப்ரவரி, 2019ம் ஆண்டு 35,281 தொழில்நுட்பம் அல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரியிருந்தது. இந்த பணியிடங்களுக்கு 1 கோடியே 26 லட்சத்து 30 ஆயிரத்து 885 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதையடுத்து, டிசம்பர் 28, 2020 முதல் ஜூலை 31, 2021 வரை இந்தியா முழுவதும் 208 நகரங்களில், 726 மையங்களில் 15 மொழிகளில் 68 நாட்கள் கணினி அடிப்படையிலான முதல்நிலை தேர்வு இணையதள வாயிலாக நடத்தப்பட்டது தேர்வு முடிந்தவுடன் தேர்வு வினாக்களுக்கான விடைகள் வெளியிடப்பட்டன.
தேர்வு வினா விடைகள் தொடர்பாக விண்ணப்பதாரர்களால் 93,263 கருத்துகள் தெரிவிக்கப்பட்டது. அவற்றை பரிசீலனை செய்த பின்னர், முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் வருகிற 2022ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக ரயில்வே பணியாளர் தேர்வாணையம் அதன் மண்டல இணையதளங்களில் அறிவித்துள்ளது.
முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 2ம் நிலைத் தேர்வுகளுக்கு அழைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2ம் நிலைத் தேர்வு 2022ம் ஆண்டுபிப்ரவரி 14 முதல் 18 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த தற்காலிக அட்டவணை, கோவிட்-19 தொற்றுநோய் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தற்போதைய நிபந்தனைகள் மற்றும் அரசாங்க வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டது.
ரயில்வே பணியாளர் தேர்வு செயல்முறை குறித்த அறிவிப்புகள் செய்திகளைத் தெரிந்துகொள்ள ரயில்வே பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்களை மட்டும் பார்க்குமாறும், இந்த விஷயத்தில் அங்கீகரிக்கப்படாத தகவல்களால் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என்று இந்திய ரயில்வே விண்ணப்பதாரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"