/indian-express-tamil/media/media_files/2025/09/07/dpi-2-2025-09-07-20-45-41.jpg)
கல்விச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள் அவ்வப்போது கண்டறியப்பட்டு, அவர்களை பணிநீக்கம் செய்து தமிழக அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் சுமார் 46,000 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுமார் 2.85 லட்சம் ஆசிரியர்கள், 17,000 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.
இதில், போலி கல்விச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள் அவ்வப்போது கண்டறியப்பட்டு, அவர்களை பணிநீக்கம் செய்து தமிழக அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இப்படி, போலி கல்விச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்தவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதைவிட, பணியில் உள்ள அலுவலர்களின் கல்வித் தகுதியை சரிபார்க்க வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தியது. அதன்படி அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் கல்வித்தகுதி குறித்த உண்மைத்தன்மை தற்போது சரிபார்க்கப்பட்டு வருகின்றன.
ஆனால், பல்வேறு மாவட்டங்களில் கல்வித்தகுதி குறித்த உண்மைத்தன்மை சரிபார்ப்பு பணிகள் முடிவடையவில்லை. கல்வி நிறுவனங்களிடம் இருந்து உண்மைத் தன்மை பெறுவதில் தாமதம் ஏற்படுவதாக ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் இந்தாண்டு இறுதிக்குள் கல்வித்தகுதி சான்று உண்மைத்தன்மை பெற்றிருப்பது அவசியம் என்று பள்ளிக்கல்வித் துறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கிய அறிவுறுத்தல்களில், “ஆசிரியர்கள், பணியாளர்கள் பலர் 10, 12-ம் வகுப்பு மற்றும் உயர்கல்விச் சான்றுக்கான உண்மைத்தன்மை பெறாமல் இருக்கின்றனர். எனவே, இந்தாண்டு இறுதிக்குள் அனைவரும் உண்மைத்தன்மை பெற்றிருப்பது அவசியமாகும். தொடர்ந்து இதை கண்காணித்து அனைவரும் உண்மைத்தன்மை வாங்கியதை உறுதி செய்து இயக்குநரகத்துக்கு அறிக்கை சமர்பிக்க வேண்டும்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.