தமிழகத்தில் தற்போதுள்ள நிலையில் பள்ளிகள் திறக்க வாய்ப்பே இல்லை என மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே. ஏ செங்கோட்டையன் தெரிவித்தார்.
அக்டோபர் 15-க்கு பிறகு படிப்படியாக பள்ளிகள் மற்றும் பயிற்சி நிலையங்களை மீண்டும் திறப்பது பற்றிய முடிவை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட வழிமுறைகளில் தெரிவிக்கப்பட்டன. உள்ளூர் நிலைமையின் அடிப்படையில், தொடர்புடைய பள்ளிகள்/நிலையங்களின் நிர்வாகங்களோடு கலந்தாலோசித்து அவற்றை மீண்டும் திறப்பது பற்றிய முடிவை எடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், இந்த மாத இறுதி வரை பள்ளிகள் திறக்கப்படாது என்று டெல்லி அரசு முடிவு அறிவித்தது. மறுபுறம், பல கட்டங்களாக பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று உத்தரபிரதேச அரசு தெரிவித்தது.
கோவிட்-19 பாதிப்பிலிருந்து மாணவர்களை பாதுகாக்க முடியும் என்று உறுதி செய்த பின்னரே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
முன்னதாக, தமிழகத்தில் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் பேரில் அடுத்த மாதம் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகளுக்குச் செல்லலாம் என்று மாநில அரசு கூறியுள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பாடங்களில் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை ஆசிரியர் மூலம் களைவதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற்றது.
இதற்கிடையே, கடந்த 2014ம் ஆண்டு, அறிமுகப்படுத்தப்பட்ட வெயிட்டேஜ் முறை காரணமாக, ஆசிரியர் தகுதித் தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று, பணிவாய்ப்பினை இழந்தவர்களுக்கு அரசுப்பணி கொடுப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.
புதிய வெயிட்டேஜ் முறையில், பட்டதாரி ஆசரியர் நியமனத்தில், 12ம் வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 10%, பட்டப்படிப்பு மதிப்பெண்ணுக்கு 15% , பி.எட் படிப்பிற்கு 15 %, ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 60% என மொத்தம் 100 மதிப்பெண்கள் கணக்கிடப்படுகின்றன. இதன் காரணமாக, தகுதித்தேர்வில் 90% க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்ற தேர்வர்கள், பள்ளி, கல்லூரிகளில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற காரணத்தினால் பணி வாய்ப்பினை இழந்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil