scorecardresearch

ஐ.ஐ.டி.,களில் தற்கொலைகள் அதிகரிப்பு எதிரொலி; மனநல ஆலோசகர்களை நியமிக்க முடிவு

பொறியியல் கல்லூரிகளுக்கான பொதுவான சேர்க்கை முறைகளில் ஜே.இ.இ அட்வான்ஸ்டு மதிப்பெண்ணை சேர்க்கும் திட்டம்; பல ஐ.ஐ.டி.,களின் இயக்குநர்கள் மற்றும் தலைவர்கள் எதிர்ப்பு

Pradhan
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஐ.ஐ.டி புவனேஸ்வரில் செவ்வாய்க்கிழமை 55வது ஐ.ஐ.டி கவுன்சில் கூட்டத்தில் கலந்துக் கொண்டார் (புகைப்பட ஆதாரம்: ட்விட்டர்)

Sujit Bisoyi , Sourav Roy Barman

மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், ஐ.ஐ.டி புவனேஸ்வரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐ.ஐ.டி கவுன்சில் கூட்டத்தில் ஒவ்வொரு வளாகத்திலும் குறைந்தது ஒரு மனநல ஆலோசகரையாவது நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் ஏழு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்தின் போது பொறியியல் கல்லூரிகளுக்கான பொதுவான சேர்க்கை முறைகளில் ஜே.இ.இ அட்வான்ஸ்டு மதிப்பெண்ணை சேர்க்கும் திட்டம் பல ஐ.ஐ.டி.,களின் இயக்குநர்கள் மற்றும் தலைவர்களிடமிருந்து எதிர்ப்பை எதிர்கொண்டது.

அனைத்து 23 முதன்மை பொறியியல் கல்லூரிகளின் உயர் ஒருங்கிணைப்பு அமைப்பான ஐ.ஐ.டி கவுன்சிலின் கூட்டம், கல்வி விஷயங்களை முடிவு செய்ய கூடியது, கூட்டத்தில் பல ஐ.ஐ.டி.,கள் கல்விக் கட்டணத்தை உயர்த்துவதன் அவசியத்தை விளக்கியது, கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது, ஆனால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என வட்டாரங்கள் தெரிவித்தன.

இதையும் படியுங்கள்: JEE முதன்மை தேர்வு 2023; ஆன்சர் கீ, ரிசல்ட் எப்போது? செக் செய்வது எப்படி?

கூட்டத்தில், மாணவர்களின் மனநலம் மற்றும் ஆரோக்கியம் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது, அமைச்சர் தர்மேந்திர பிரதான் “நிறுவனங்களில் பாகுபாடு காட்டப்படுவதை தடுக்க பூஜ்ஜிய சகிப்புத்தன்மையின் வலுவான வழிமுறையை” உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

“சமீபத்தில், ஐ.ஐ.டி வளாகங்களில் ஒருபோதும் நடக்கக்கூடாத ஒரு குறிப்பிட்ட விஷயம் பற்றிய அறிகுறிகள் இருந்தன. எந்தவொரு வளாகத்திலும் எந்தவிதமான பாகுபாடும் இருக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்துவது ஆசிரியர்கள், முதல்வர்கள் மற்றும் இயக்குநர்களின் பொறுப்பாகும். இது ஒரு சமூக சவால்,” என்று கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.

இந்த பிரச்சனை தொடர்பாக, மாணவர்கள் மனநலப் பிரச்சினைகளுடன் போராடுவது, படிப்பின் பாதியிலேயே வெளியேறுவது மற்றும் சில சமயங்களில் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகியவற்றின் பின்னணியில் உள்ள குறிப்பிட்ட காரணங்கள் குறித்த அறிக்கைகளை ஒவ்வொரு ஐ.ஐ.டி.,யும் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. “இளங்கலைப் படிப்புகளுடன் ஒப்பிடும்போது முதுகலை மட்டத்தில் இடைநிற்றல் விகிதம் அதிகமாக இருப்பதைக் காண முடிந்தது, ஏனெனில் பல மாணவர்கள் வேலை வாய்ப்பு காரணமாக அடிக்கடி வெளியேறுகிறார்கள்,” என்று ஒரு வட்டாரம் தெரிவித்தது.

ஐ.ஐ.டி.,ள் அடுத்த சில மாதங்களில் மனநலம் குறித்த சிறப்புக் கூட்டத்தை நடத்த வாய்ப்புள்ளது, அங்கு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அழைக்கப்படுவார்கள் என்று பெயர் வெளியிட விரும்பாத நிலையில் ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது.

ஐ.ஐ.டி புவனேஸ்வர் இயக்குனர் ஸ்ரீபாத் கர்மல்கர் கூறுகையில், “மாணவர் ஆசிரியர் விகிதத்தை 1:20 என்ற விகிதத்துடன் ஒப்பிடுகையில், 1:10 ஆக அதிகரிக்க கவுன்சில் உறுப்பினர்கள் பரிந்துரைத்தனர். மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் சிறந்த கவனம் செலுத்த ஆசிரியர்களுக்கு இது உதவும். வகுப்பறை வருகை மற்றும் விடுதி வருகை ஆகிய இரண்டின் மூலம் மாணவர்களின் சாத்தியமான பிரச்சனைகளை அடையாளம் காணவும் வலியுறுத்தப்பட்டது.

ஒரு அறிக்கையில், ஐ.ஐ.டி.,கள் மாணவர்களுக்கு அனைத்து ஆதரவு அமைப்புகளையும் வழங்க வேண்டும் மற்றும் அனைத்து வகையான பாகுபாடுகளுக்கும் பூஜ்ஜிய சகிப்புத்தன்மையைக் கொண்டிருக்க வேண்டும் என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாக மத்திய அரசு மேற்கோளிட்டுள்ளது.

செயலூக்கமான பதில்: ஐ.ஐ.டி கவுன்சில் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் உள்ள மனநலம் குறித்த கவலைகள், அதிகாரிகளின் பயனுள்ள தலையீடுகளைக் கோரி பல்வேறு மாணவர் அமைப்புகள் சமீபத்தில் நடத்திய வளாகப் போராட்டங்கள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதைக் காட்டுகிறது. வளாகங்களில் ‘பூஜ்ஜிய பாகுபாடு’ என்ற அரசாங்கத்தின் அழைப்பு, சமத்துவமற்ற நடைமுறையின் இருப்பை மறைமுகமாக அங்கீகரிப்பதாகும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Suicide cases iits to appoint mental health counsellors jee main jee advanced 2023