சேலம் மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள குக்கிராமத்தைச் சேர்ந்த மாணவி சுகன்யா, ஜே.இ.இ (JEE) நுழைவுத் தோ்வில் வெற்றி பெற்று, திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் (National Institute of Technology) பொறியியல் படிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்.
சேலம் மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள கருமந்துறையை அடுத்த வேளம்பட்டு என்ற கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவி சுகன்யா. மூன்று வயதில் தனது தாயை இழந்த சுகன்யா, லட்சுமணன் - சின்னபொண்ணு ஆகியோரை பெற்றோராய் ஏற்று அவர்களின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார். கரியகோயில் அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு முடித்தார்.
இந்நிலையில், மத்திய அரசு நடத்திய பொறியியல் படிப்புகளுக்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வான ஜே.இ.இ தேர்வில், முதன்மை மற்றும் மேல்நிலை ஆகிய இரண்டு படிநிலைகளிலும் வெற்றி பெற்றார். இதன் மூலம், மாணவி சுகன்யா திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் (National Institute of Technology) பொறியியல் படிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்.
இந்த வெற்றி குறித்து மாணவி சுகன்யா கூறும் போது, "என்னுடைய பெற்றோர் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் எனக்கு நல்ல வழிகாட்டுதல்களை வழங்கினர். சாதிச்சான்று கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் இருந்த எனக்கு, எங்களுடைய பள்ளி ஆசிரியர்கள் உதவியால் சாதிச் சான்றிதழ் கிடைத்தது. வெற்றி ஒன்றே குறிக்கோள் என்ற இலக்குடன் இரவு பகல் பாராமல் படித்தேன்.அதனால், இந்த தேர்வில் வெற்றி பெற்றேன்.
/indian-express-tamil/media/post_attachments/2edd25d7-3c5.jpg)
எந்த தோல்வியும் நிரந்தரமானது கிடையாது. மாணவர்கள் தைரியமாக தேர்வுகளை எதிர்கொண்டு எழுதி வெற்றி பெற வேண்டும். எனக்கு திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் உற்பத்திப் பொறியியல் (Production Engineering) படிக்க போகிறேன்" என மாணவி சுகன்யா கூறினார்.
இதேபோல் திருச்சி பச்சமலை கிராமத்தைச் சேர்ந்த மலைவாழ் மாணவி ரோஹிணியும் ஜே.இ.இ தேர்வில் வெற்றி பெற்று தேசிய தொழில் நுட்பக் கழகத்தில் (National Institute of Technology) வேதிப்பொறியியல் படிக்கத் இருக்கிறார். அதேபோல் தமிழக அளவில் தரவரிசையில் 302வது இடம் பிடித்த திருச்சி கைலாசபுரத்தை சேர்ந்த கவினி என்ற மாணவி கட்டிடக்கலை பிரிவில் படிக்கவும், மாநில அளவில் 2538 தர வரிசை பெற்ற முத்தரசநல்லூரை சேர்ந்த மாணவி ரித்திகா கணினி அறிவியல் மற்றும் பொறியியல் படிப்பில் சேர்வதற்கும், தமிழக அளவில் 7,106 தரவரிசை பெற்ற பூலாங்குடியை சேர்ந்த மாணவி திவ்யாபிரீதா தயாரிப்பு பொறியியல் பிரிவில் சேர்வதற்கும், தமிழக அளவில் 8,872 தரவரிசை பெற்ற கைலாசபுரத்தை சேர்ந்த தனுஷ் ராஜ்குமார் பங்காரு தயாரிப்பு பொறியியல் பட்டம் படிப்பதற்கும் திருச்சி என்.ஐ.டி கல்லூரியில் பதிவு செய்துள்ளனர்.
படித்தால் எந்த உயரத்தையும் அடையாலாம் என்பதற்கு இந்த மாணவர்கள் சிறந்த உதாரணமாக திகழ்கின்றனர். கடந்த 60 ஆண்டுகளில் முதல்முறையாக பழங்குடியின மாணவர்கள் 6 பேர் திருச்சி என்.ஐ.டி-க்கு தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“