பாவ் பாஜி, பானி பூரி, கச்சோரி போன்ற சாட் வகை உணவுகளை தயாரிக்க தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் பயிற்சி வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இந்த பயிற்சியில் பங்கேற்று சுயதொழில் தொடங்கும் வாய்ப்பைப் பெறலாம்.
இந்த பயிற்சி தொடர்பாக பயிற்சி மையத்தின் தலைவர் ஏ.டி.அசோக் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;
சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் ஜூன் 4 ஆம் தேதி (புதன்கிழமை) சாட் வகை உணவுகளை தயாரிக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சியில் பாவ் பாஜி, நாட்சோஸ், கச்சோரி, பானி பூரி, சேவ் பூரி, பேல் பூரி, பன்னீர் பிங்கர் ரோல், சீஸ் ஸ்டிக்ஸ், ஆனியன் சமோசா, கிரீன் சட்னி, இனிப்பு சட்னி உள்ளிட்டவற்றை தயாரிக்க கற்றுக்கொடுக்கப்படும்.
அதைத் தொடர்ந்து ஜூன் 5 ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும் ஊறுகாய், தொக்கு, பேஸ்ட் வகைகளை தயாரிக்கும் பயிற்சியில் வாழைப்பூ தொக்கு, தக்காளி ஊறுகாய், புதினா தொக்கு, கொத்தமல்லி தொக்கு, இஞ்சி தொக்கு, கோங்குரா ஊறுகாய், முருங்கைக்காய் ஊறுகாய், இஞ்சி புளி ஊறுகாய், புளியோதரை பேஸ்ட், வத்தக்குழம்பு பேஸ்ட் போன்றவை குறித்து செய்முறை பயிற்சிகள் வழங்கப்படும்.
வியாபாரிகள், தொழில்முனைவோர், மகளிர், இளைஞர்கள், சுய உதவிக் குழுவினர் என அனைத்து தரப்பினரும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் 044-29530048 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.