தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மே 6-ம் தேதி வெளியானது. இதையடுத்து மாணவர்கள் உயர்கல்வி பயில கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டன. என்ஜினியரிங் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு ஆன்லைனில் வெளியிடப்பட்டு நடந்து வருகிறது. விரைவில் ரேண்டம் எண் வெளியிடப்பட்டு கவுன்சிலிங் தொடங்க உள்ளது. தொடர்ந்து மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக நீட் தேர்வு முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு கடந்த மே 6 முதல் தொடங்கி நேற்று உடன் முடிவடைந்த நிலையில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை கல்லூரிக் கல்வி இயக்ககம் நீட்டித்து அறிவித்துள்ளது.
அதன்படி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் கல்லூரிகளில் 2024-25-ம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பதிவு www.tngasa.in என்ற இணையதள முகவரியில் மே 6 முதல் தொடங்கியது.
இணையவழி விண்ணப்பம் சமர்பிக்க இறுதி நாள் நேற்று (மே 20) ஆக இருந்தது. இன்னும் அதிக மாணவர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக இணையவழி விண்ணப்பம் செய்ய இறுதி நாள் மே 24 வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
![GOB6E4VbcAAzTS2.jpg](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/1B2GuxlkvOVeCCwRaetH.jpg)
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு நேற்று (மே 20) மாலை 6 மணி வரை 2.2 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மாநிலத்தில் உள்ள 164 அரசு கல்லூரிகள் மொத்தம் 1.07 லட்சம் இடங்கள் உள்ளன.