கல்வி உதவித்தொகைக்கான என்.எம்.எம்.எஸ் தேர்வுக்கு மாணவர்கள் ஜனவரி 24-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் திட்டத்தின் (NMMS) கீழ் அரசு, அரசு உதவி பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதற்காக ஆண்டுதோறும் தேர்வு நடத்தப்படும். இந்தத் தேர்வின் மூலம் தமிழகத்தில் 6,695 பேர் உட்பட நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும்.
அதன்படி நடப்பு கல்வியாண்டுக்கான என்.எம்.எம்.எஸ் தேர்வு பிப்ரவரி 22-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்வுக்கு 8-ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு செவ்வாய்கிழமை (டிசம்பர் 31) தொடங்கியது. விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் தேர்வுத் துறை இணையதளத்தில் (dge.tn.gov.in) விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
பூர்த்தி செய்த படிவங்களை தேர்வுக் கட்டணம் ரூ.50-ஐ சேர்த்து தாங்கள் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் ஜனவரி 24-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களைத் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.
என்.எம்.எம்.எஸ் தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் மாநில அரசு, அரசு உதவி பெறும் அல்லது உள்ளாட்சி பள்ளிகளில் படிக்க வேண்டும். மேலும், குடும்ப வருமானம் ரூ 3,50,000 க்கும் குறைவாக இருக்க வேண்டும்.
என்.எம்.எம்.எஸ் தேர்வு வினாத்தாள் 7 மற்றும் 8 ஆம் வகுப்பு பாடத்திட்டங்களின் அடிப்படையில் இருக்கும். இது இரண்டு தேர்வுகளைக் கொண்டிருக்கும்: ஒரு மன திறன் தேர்வு (MAT) மற்றும் ஒரு பள்ளிக்கல்வி திறன் தேர்வு (SAT). ஒவ்வொரு தேர்விலும் 90 பல தேர்வு கேள்விகள் உள்ளன. தேர்வுக்கான கால அளவு 90 நிமிடங்கள் வழங்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“