/indian-express-tamil/media/media_files/2025/05/01/ecNI1lFDoszWZ2r9ZDpL.jpg)
அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் தரநிலை அறிக்கையை பயன்படுத்த தொடக்கக் கல்வித் துறை சார்பில் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் நரேஷ் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;
எண்ணும் எழுத்தும் திட்டத்தின்கீழ் நடப்பு கல்வி ஆண்டில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் தரநிலை அறிக்கை அச்சிட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதை மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசுப் பள்ளிகளுக்கு பிரித்து வழங்க வேண்டும். இந்த அறிக்கையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. அதை பின்பற்றி செயல்படுமாறு தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்த வேண்டும்.
இதுதவிர, தரநிலை அறிக்கையில் மாணவர்களின் அடிப்படை விவரங்களை நிரப்பி, அவரது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்ட வேண்டும். ஒவ்வொரு பருவத்திலும் மொத்த வேலை நாட்கள், மாணவர் பள்ளிக்கு வந்த நாட்களின் எண்ணிக்கையை நிரப்ப வேண்டும்.
திறன் அடிப்படையிலான பகுதிகள், மொழித் திறன்கள், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் திறன்களில் குழந்தையின் தரநிலையை (ஏ, பி, சி) பதிவு செய்ய வேண்டும். இதேபோல, கல்வி இணைச் செயல்பாடுகள், விளையாட்டு பங்கேற்பு, குழுப்பணி, படைப்பாற்றல் போன்ற பகுதிகளில் குழந்தையின் ஈடுபாட்டை கருத்தில் கொண்டு, அதற்கான தரநிலையை பதிவுசெய்ய வேண்டும்.
மேலும், அதில் ஆசிரியர் குறிப்பு, பெற்றோரின் கருத்துப் பதிவு, கையொப்பம் போன்ற பகுதிகளும் இடம்பெற்றுள்ளன. மதிப்பெண் அட்டையை பெற்றதும் பெற்றோர் தங்கள் கருத்துகளை எழுத ஊக்கமளிக்க வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.