தமிழகத்தில் உள்ள ஐ.டி.ஐ நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;
தமிழகத்தில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் 132 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும் (ஐ.டி.ஐ), 311 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் இயங்கி வருகின்றன. இவற்றில் நடப்பு கல்வி ஆண்டில் (2025-26) நேரடி மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் ஜூலை 31 வரை வழங்கப்பட்டிருந்தது. தற்போது மாணவர்களின் நலன் கருதி நேரடி சேர்க்கை ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்படுகிறது.
தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் இல்லை. கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.750 வழங்கப்படும். தமிழக அரசு வழங்கும் விலையில்லா சைக்கிள், சீருடை, ஷூ, பயிற்சிக் கருவிகள் மற்றும் பஸ் பாஸ் வழங்கப்படும்.
இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தாங்கள் விரும்பும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் சென்று விரும்பும் தொழிற்பிரிவை தெரிவு செய்து சேர்ந்து கொள்ளலாம். ஐ.டி.ஐ மாணவர் சேர்க்கை தொடர்பாக ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் 9499055642, 9499055618 ஆகிய செல்போன் எண்களில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.