பாலிடெக்னிக் கல்லூரி மாணாக்கர்கள் நிலுவை வைத்துள்ள பாடங்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் கூறியதாவது;
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, தமிழ்நாட்டு மக்களின் பொருளாதார தேவையை அறிந்து அரசின் அனைத்து துறைகளின் சார்பாக பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. தமிழ்நாட்டின் மாணவச் செல்வங்களின் எதிர்கால நலன் கருதி, மாணாக்கர்களின் மீது தனி அக்கறை கொண்டு உயர் கல்வித் துறையில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி மாணாக்கர்களின் கல்வித் தரத்தை செம்மைபடுத்தி வருகிறது. ஏழை, எளிய மாணாக்கர்கள் கல்வி பயின்று, தகுந்த வேலை வாய்ப்பினைப் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் "நான் முதல்வன்" திட்டத்தின் மூலம் பல்வேறு நிலையில் தொழிற்சார் பயிற்சியினை வழங்கி வருகிறது.
ஏப்ரல், 2025 இல் நடைபெற்ற பட்டயத் தேர்வுகளில் இறுதி பருவம் / துணைத் தேர்வினை எழுதிய பாலிடெக்னிக் கல்லூரி மாணாக்கர்கள் சில பாடங்களில் தேர்ச்சி அடையாமல் நிலுவை வைத்துள்ளனர். அம்மாணாக்கர்கள் அடுத்த நிலையான உயர் கல்வி பயிலவோ அல்லது வேலை வாய்ப்பிற்கோ செல்ல இயலாமல் இருக்கும் சூழ்நிலையினை போக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மேற்படி மாணாக்கர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பினை வழங்க ஏதுவாக ஜூன் / ஜூலை 2025 சிறப்பு துணைத் தேர்வின் (Special Supplementary Examination) மூலம் தேர்ச்சி பெறாமல் உள்ள நிலுவைப் பாடங்களை எழுத வாய்ப்பு வழங்கிட அறிவுறுத்தியுள்ளார்கள்.
அதன்படி இம்மாணாக்கர்களுக்கு தற்பொழுது ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. இது குறித்த விவரங்கள் அனைத்தும் https://dte.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இணையதளத்தின் வாயிலாக மாணாக்கர்கள் அறிந்து கொள்ளலாம். மேலும், ஜூன் / ஜூலை 2025 சிறப்பு துணைத் தேர்வுகளுக்கு கீழ் குறிப்பிட்டுள்ள கால அட்டவணையின்படி விண்ணப்பிக்கலாம்.
ஜூன் / ஜூலை 2025 சிறப்பு துணைத் தேர்வுகளுக்கு (Special Supplementary Exams)
விண்ணப்பிப்பதற்கான கால அட்டவணை
சிறப்பு துணைத் தேர்வுகளுக்காக (Special Supplementary Examination) இணைய வழியில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: 18.06.2025 (புதன்கிழமை)
சிறப்பு துணைத் தேர்வுகளுக்காக (Special Supplementary Examination) இணைய வழியில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.06.2025 (திங்கட்கிழமை) இரவு 11.59 வரை
தேர்வு நுழைவுச் சீட்டு (Hall Ticket) பதிவேற்றம் செய்யப்படும் நாள்: 25.06.2025 புதன்
கருத்தியல் தேர்வுகள் (Theory Examination) நடைபெறும் நாட்கள்: 30.06.2025 (திங்கட்கிழமை) முதல் 16.07.2025 (புதன்கிழமை) வரை
செய்முறைத் தேர்வுகள் (Practical Examination) நடைபெறும் நாட்கள்: 17.07.2025 (வியாழக்கிழமை) முதல் 25.07.2025 (வெள்ளிக்கிழமை) வரை
தேர்வு முடிவு வெளியிடப்படும் நாள்: 30.07.2025 (புதன்கிழமை)
ஜூன் / ஜூலை 2025 சிறப்பு துணைத் தேர்வுகளுக்கான (Special Supplementary Exams) தேர்வுக் கட்டணம்
1). விண்ணப்பக் கட்டணம் ரூ. 30
2). ஒரு பாடத்திற்கான தேர்வுக் கட்டணம் ரூ. 65
மாணாக்கர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் எதிர்காலத்தை வளமாக்கி கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.