தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரிய மாநிலத் தகுதித் தேர்வு எனப்படும் செட் தேர்வில் (SET Exam) தகுதி பெறுவது கட்டாயமாகும். இந்த செட் தேர்வை பல்கலைக்கழகங்கள் சுழற்சி முறையில் நடத்தி வந்தன. இந்த நிலையில், செட் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் என்று சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் செட் தேர்வு வருகின்ற மார்ச் மாதம் 6, 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கணினி வாயிலாக நடைபெறும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளதாவது; “மாநில தகுதித் தேர்வினை (செட்) தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக நடத்திட அரசு ஆணையிட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, மாநில தகுதித் தேர்வினை வருகின்ற மார்ச் மாதம் 6, 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கணினி வாயிலாக நடத்த தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான நுழைவுச் சீட்டு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் http://www.trb.tn.gov.in என்ற இணையதள முகவரியில், தேர்வு தேதிக்கு 7 நாட்களுக்கு முன்னர் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.”