/indian-express-tamil/media/media_files/2025/05/19/iUF3DfLlbt01jPXPI5Ja.jpg)
இந்திய மருத்துவத்தின் துணை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 23 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;
2025-2026-ம் கல்வியாண்டிற்கு, சென்னை மற்றும் பாளையங்கோட்டையில் உள்ள அரசு ஆயுஷ் துணை மருத்துவ படிப்புப் பள்ளிகளில் உள்ள இடங்களுக்கான (DIP- மருந்தாளுநர் / DNT-செவிலியர்) பட்டயப் படிப்புகள் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பங்கள் (Online Applications) தகுதியுள்ளவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மருந்தாளுநர் / செவிலியர் (DIP / DNT) பட்டயப் படிப்புகளுக்கான தகவல் தொகுப்பேட்டினை, www.tnhealth.tn.gov.in, www.tnayushselection.org என்ற வலைதளங்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இணையவழியில் மட்டுமே (Online Applications) விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். வேறு எந்த வழிகளிலும் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள், விண்ணப்பக் கட்டணம் மற்றும் பிற கட்டண விவரங்கள், கலந்தாய்விற்கான அட்டவணை மற்றும் பிற தகவல்களினை www.tnhealth.tn.gov.in, www.tnayushselection.org என்ற வலைதளங்களில் உள்ள உரிய தகவல் தொகுப்பேட்டில் அறியலாம்.
விண்ணப்பிக்கும் முன் தகவல் தொகுப்பேட்டினை முழுமையாகப் படித்து சரியான தகவல்களைப் பதிவேற்றவும் மற்றும் தேவையான இடங்களில் அனைத்து அசல் சான்றிதழ்களின் PDF/JPEG வடிவில் பதிவேற்றவும். விண்ணப்பக் கட்டணம், இணையவழி கலந்தாய்வுக் கட்டணம், கல்விக் கட்டண முன்பணம் இவை அனைத்தும் இணையவழி மூலமாக மட்டுமே செலுத்தவேண்டும்.
பட்டய மருத்துவ படிப்புப் பிரிவுகள்: DIP- மருந்தாளுநர் / DNT- செவிலியர்
படிப்பிற்கான காலம்: 2½ ஆண்டுகள்
படிப்பிற்கான கல்வித்தகுதி: 10+2 படித்திருக்க வேண்டும்.
கல்லூரிகளின் விவரங்கள்: அரசு ஆயுஷ் துணை மருத்துவ படிப்புப் பள்ளிகள் – 02
அரசு சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் மட்டும், இணையவழியில் விண்ணப்பித்த பிறகு அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, கோரப்பட்டுள்ள அனைத்துச் சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்ட நகல்களையும் இணைத்து செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை ஆணையர் அலுவலகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை - 600 106 என்ற முகவரிக்கு 23.09.2025 மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பித்தல் / வந்து சேர வேண்டும்.
ஆயுஷ் துணை மருத்துவ படிப்புகளுக்கான அறிவிக்கை நாள் - 09.09.2025
தகவல் தொகுப்பேட்டினைப் பதிவிறக்கம் செய்ய துவங்கும் நாள் - 09.09.2025 முதல்
இணையவழி விண்ணப்பம் பதிவு செய்ய துவங்கும் நாள் - 09.09.2025 முதல்
தகவல் தொகுப்பேட்டினைப் பதிவிறக்கம் செய்ய கடைசி நாள் - 23.09.2025 மாலை 5.00 மணி வரை
இணையவழி விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள் - 23.09.2025 மாலை 5.00 மணி வரை
அரசு சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பிக்க இணையவழி விண்ணப்பத்துடன் அனைத்து சுய சான்றொப்பமிட்ட சான்றிதழ்களுடன் தபால் / கூரியர் சேவை வாயிலாக சமர்ப்பிக்கவோ அல்லது நேரில் சமர்ப்பிக்கவோ கடைசி நாள் 23.09.2025 மாலை 5.00 மணி வரை
மருந்தாளுநர் / செவிலியர் (DIP / DNT) பட்டயப் படிப்புகள் கலந்தாய்வு குறித்த விரிவான விவரங்களுக்கு உரிய தகவல் தொகுப்பேட்டினைப் பார்க்கவும்.” இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.