தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ கவுன்சலிங் கமிட்டி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள 11,350 எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் இடங்களின் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இந்தாண்டு ஜூன் 6 தேதி தொடங்கியது. எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளில் சேர்க்கை பெற தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வில் தகுதி பெறுவது அவசியம். எனவே அதற்கு ஏற்றாற்போல், வழக்கமாக நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின்னரே விண்ணப்பப் பதிவு தொடங்கும். அதேநேரம், மாணவர்களுக்கு விண்ணப்பிக்க போதுமான அவகாசம் வழங்கும் பொருட்டு இந்த ஆண்டு முன்னரே தொடங்கப்பட்டது.
இந்தநிலையில், நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 14 ஆம் தேதி வெளியானது. நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஜூன் 25 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது. நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர்.
இந்த நிலையில் மருத்துவ படிப்புகளுக்காக கால அவகாசம் இன்று முடிவடைய இருந்த நிலையில், தற்போது விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 29 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.