தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 21 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவ-மாணவிகள் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கு அடுத்ததாக, மருத்துவ துறையில் பணியாற்றும் நோக்கில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பு மற்றும் பாரா மெடிக்கல் படிப்புகளை படிக்க விரும்புகின்றனர். இந்த துணை மருத்துவ படிப்புகளை படிக்க அதிக செலவு ஏற்படும். இதனால் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சுயநிதி கல்லூரிகளில் இந்தப் படிப்புகளைப் படிக்க விரும்புகின்றனர்.
பாரா மெடிக்கல் படிப்புகளை பொறுத்தவரையில், பி.பார்ம் (B.Pharm), பி.பி.டி (B.P.T), B.ASLP, B.OPTOM, B.O.T மற்றும் பி.எஸ்.சி (B.Sc) பிரிவில், ரேடியாகிராபி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, ரோடியோ தெரபி டெக்னாலஜி, கார்டியோ பல்மோனாரி பெர்ஃபியூசன் டெக்னாலஜி, மெடிக்கல் லேபரட்டரி டெக்னாலஜி, ஆபரேஷன் தியேட்டர் மற்றும் அனஸ்தீசியா டெக்னாலஜி, கார்டியாக் டெக்னாலஜி, கிரிட்டிக்கல் கேர் டெக்னாலஜி, டயாலிசிஸ் டெக்னாலஜி, பிசிசியன் அசிஸ்டென்ட், ஆக்சிடென்ட் மற்றும் எமர்ஜென்சி கேர் டெக்னாலஜி, ரெஸ்பிராடரி தெரபி, நியூரோ எலக்ட்ரோ சைக்காலாஜி, கிளினீக்கல் நியூட்ரிசியன் உள்ளிட்ட படிப்புகள் உள்ளன.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சுயநிதி கல்லூரிகளில் இந்த படிப்புகளை படிக்க விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.
இதுதொடர்பாக, தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் 2024-2025 கல்வியாண்டில் சேருவதற்காக www.tnmedicalselection.net இணையதளத்தை அணுகலாம். சேர்க்கை செயல்முறை தொடர்பான மாற்றங்கள் மற்றும் தொடர்புடைய தகவல்கள் இந்த இணையதளத்தில் தெரிவிக்கப்படும். விண்ணப்பத்தின் தொடக்க நாள் முதல் சேர்க்கை செயல்முறை முடிவடையும் வரை இணையதளத்தை அடிக்கடி விண்ணப்பதாரர்கள் பார்வையிட வேண்டும்.
2024-2025 ஆம் ஆண்டு மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பில் சேருவது தொடர்பாக இணையதளத்தில் வெளியிடப்படும் அறிவிப்புகள் மற்றும் வெளியீடுகள் பார்வையிட தவறுவதால் ஏற்படும் விளைவுகளுக்கு தேர்வுக்குழு பொறுப்பேற்காது. இணையதளத்தை அணுக முடியாத விண்ப்பத்தாரர்கள் தங்களது பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் அனைத்து அசல் சான்றிதழ்களையும் எடுத்து அருகில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி/ தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரிக்கு ரேடியாக சென்று அங்குள்ள இணையதள உதவி மையத்தை அணுகி விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யலாம்.
விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் தகவல் தொகுப்பினைத் தரவிறக்கம் செய்த அச்சுப்படி எடுத்து தங்களது பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் கவனமாக படித்து இணையதள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கட்டாயமாக நிரப்பப்பட வேண்டிய தகவல்களையும் சமர்ப்பிப்பதை உறுதி செய்ய வேண்டும். இணையதள விண்ணப்ப படிவத்தை ஏற்காத நிகழ்வில் மறுபரிசீலனைக்கு எந்த ஒரு கடிதம் வாயிலான கோரிக்கைகள் ஏற்கப்படாது.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத இணையதள விண்ணப்பப்படிவம் ஏற்றுக்கொள்ளப்படாது. கொடுக்கப்பட்டுள்ள விபரங்களில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்களை பார்க்கலாம். இல்லாவிட்டால் 044-29862045, 044-29862046, 044-28363822, 044-2834822, 044-28365822, 044-28366822, 044-2836822, 044-2836782 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம். இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் ஜூன் 21ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“